காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் கைவிரிப்பு

தமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பற்ற 12 டி.எம்.சி. நீரையாவது கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை தெரிவிக்காத காவிரி கண்காணிப்புக் குழு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் 1992ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு பயன்படுத்திய தண்ணீர் எவ்வளவு, நடுவர் மன்றம் அனுமதித்த தண்ணீர் எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந் நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் லோத்தா, செலமேஸ்வர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட முடியாது. இதனை பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்திடம் தமிழகம் முறையிடலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
முன்னதாக கர்நாடக அணைகளில் குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் உள்ளதாகவும், இதனால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது என்றும் கர்நாடக வழக்கறிஞர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications