Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை

Subscribe to Oneindia Tamil

விருத்தாசலம்: அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு எம்.ஏ.,எம்.எல். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிவாச்சாரியார்கள் தொடுத்துள்ள வழக்கு 29-1-13 அன்று உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வருகிறது. கடந்த வாய்தாவில் (13-12-12 அன்று) தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவாச்சாரியார்களுடன் பேசி சமரசத்தீர்வு காண இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து மீண்டும் வாய்தா வாங்கினார்.

பிராமணர் அல்லாதோர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டு என்று கூறும் தீண்டாமையை, மத உரிமையாக அங்கீகரிக்க முடியுமா என்பது தான் இந்த வழக்கில் விடை காண வேண்டிய கேள்வி. இதில் சமரசத் தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இதன் பின்புலத்தைப் பார்ப்பவர்கள் யாரும் புரிந்து கொள்ள முடியும்.

இந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு வழிவகுக்கும் ஒரு சட்டத்திருத்தம், அரசாணை மூலம் 2006ம் ஆண்டில் திமுக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தொடங்கி, அதில் எல்லா சாதிகளையும் சேர்ந்த 206 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தது. 2008ல் மாணவர்கள் பயிற்சி முடித்து தீட்சையும் பெற்று பணி நியமனம் பெறுவதற்கு தயாராக இருந்தனர்.

இந்த நிலையில் பிராமணர் அல்லாதோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அர்ச்சகராக நியமிப்பது ஆகம விதிகளுக்கு முரணானது என்றும், இதனை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால் கடவுள் சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும் கூறி மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பெற்றனர்.

இதனை ஒட்டி மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கியதுடன், இம்மாணவர்கள் சார்பில் மனுச் செய்து, மேற்படி உச்ச நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பாகவும் சேர்ந்திருக்கிறோம். மாணவர்களின் நியமனத்துக்கு இடைக்காலத் தடை பெற்று விட்ட பிராமண சிவாச்சாரியார்கள், அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்தவிடாமல், திட்டமிட்டே பல ஆண்டுகளாக வாய்தா வாங்கி வருகின்றனர்.

1970ல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவு போராட்டத்தை தொடர்ந்து, கோவில்களில் அர்ச்சகர் பணியில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழித்து திமுக அரசு சட்டம் இயற்றியது. இதற்கு எதிராக சிவாச்சாரியார்கள் தொடுத்த வழக்கில் 1972ல் உச்ச நீதிமன்றம், "அர்ச்சகர் நியமனத்தில் தமிழக அரசு வாரிசுரிமையை ஒழித்தது செல்லும்" என்று கூறிய போதிலும், ஆகம விதிப்படி தகுதியான வேறொருவரைத்தான் அரசு அர்ச்சகராக நியமிக்க முடியுமென்றும் கூறியது. ஒவ்வொரு கோவிலிலும் மரபுப்படி குறிப்பிட்ட பிராமண உட் சாதியிலிருந்துதான் அர்ச்சகர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று கூறிய இந்த தீர்ப்பு, மரபு என்ற பெயரில் தீண்டாமையை மத உரிமை என்று நியாயப்படுத்தியது.

தீண்டாமை ஒரு மத உரிமையாக முடியுமா என்பது தான் தற்போது உள்ள வழக்கு. இந்த வழக்கை நடத்தினால் தாங்கள் தோற்றுவிடுவோம் என்பது மட்டுமின்றி, தீண்டாமையை நிலைநாட்டும் தங்களது சாதி வெறி அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதனாலும் தான், சிவாச்சாரியார்கள் வழக்கையே நடத்தவிடாமல் முடக்குகின்றனர். தற்போது சமரசத் தீர்வு என்று கூறுவதன் மூலம், திமுக அரசு இயற்றிய சட்டத்திற்கு குழி பறிக்கும் வேலையை தமிழக அரசு செய்கிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

இவ்வழக்கு அர்ச்சகர் பணி நியமனம் பெறுவது தொடர்பானது மட்டுமல்ல. ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழக்காகும். சமூக நடவடிக்கையில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும் அர்ச்சகர் நியமனத்தைப் பொறுத்தவரையில் தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தாலேயே இன்று பல்வேறு கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகமவிதிகளின் படி தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் ஆகியோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர் பணி செய்கின்றனர்.

பிராமண சாதியில் பிறக்கவில்லை என்பதைத் தவிர வேறு எந்தத் தகுதிக் குறைவும் அற்ற மாணவர்களை கடந்த 5 ஆண்டுகளாகத் தெருவில் நிறுத்தி விட்டு, பிராமண சிவாச்சாரியார்களுடன் சமரசம் பேசப்போவதாக அரசு கூறுவது அப்பட்டமான நம்பிக்கைத் துரோகமாகும். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாதாட இருக்கிறோம்.

ஆலயத் தீண்டாமையை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து, 30.1.2013 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் எமது அமைப்பும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் இணைந்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம். தமிழக அரசு நடத்தும் இந்த திரைமறைவு நாடகத்தை முறியடிக்கும் எமது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதுடன், தங்களது எதிர்ப்பையும் காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+