எனக்கு குழி தோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி

மத்திய அமைச்சர் முக அழகிரியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஜி.வெங்கட் என்கிற ஜி.வி.ரமணா (இருவரும் திமுகவினர் அல்ல) சென்னை நகர் முழுவதும் குறிப்பாக கருணாநிதியின் வீடு உள்ள கோபாலபுரம் பகுதியில் ஒருசுவர் கூட விடாமல் 3 வித போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில் திமுக தலைமையையும் விமர்சித்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படி 3 வகையாக அடிக்கப்பட்ட போஸ்டர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டன. இதைப் பார்த்த திமுக தொண்டர்கள் அந்த போஸ்டர்களை நேற்று இரவோடு இரவாக கிழித்து எறிந்தனர்.
இந்நிலையில் இது குறித்து கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாற்றார் பாசறையில் இருந்து முடுக்கி விடப்பட்டதன் விளைவு தான் இந்த சுவரொட்டிகளும், சுவரொட்டி வாசகங்களும். இதற்கு என் மகன்கள் யாரும் காரணமாக இருக்கவே முடியாது என்று நான் நம்புகிறேன். வெங்கட் என்றும், ரமணா என்றும் பெயரிட்டு அந்த சுவரொட்டிகளை ஒட்டிய மாயமான்கள் குறிப்பாகக் கூற வேண்டுமேயானால் மாரீச மான்கள்.
சில கழக முன்னணிக்கு தங்களை ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டு அதன் மூலம் கழகத்தை பிளக்க நடத்தப்பட்ட சதியின் தூதர்களாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மூக்கறுப்பட்டு போவார்கள். என் தலைமையில் உள்ள கழகத்திற்கு மட்டுமன்று, எனக்கும் குழி தோண்ட நினைத்தவர்கள் நிலைத்து நின்றதுமில்லை, இனி நிலைக்கப் போவதும் இல்லை. அவர்கள் யார் என்ற உண்மை முகிலைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும் உதய கால சூரியனைப் போல வெளிப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications