தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு... மின்வெட்டு 6 மணி நேரமாக குறைந்தது
சென்னை: தமிழகத்தில் மின் உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளதால், மின்வெட்டு நேரம் குறைந்துள்ளது. அதாவது சென்னை தவிர்த்த மாவட்டங்களில் 6 மணி நேரமாக மின்வெட்டு குறைந்துள்ளது.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஒரு மாத காலமாக 9000 மெகா வாட் அளவைத் தாண்டி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 27-ம் தேதி மின் உற்பத்தி அதிகபட்சம் 10,017 மெகா வாட் அளவில் இருந்தது.
பற்றாக்குறை வெகுவாகக் குறைந்த காரணத்தால் மாவட்டங்களில் நிலவும் பல மணி நேர மின்வெட்டு கடந்த ஒரு மாத காலமாக 6 முதல் 7 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
2012 செப்டம்பர் மூன்றாம் வாரம் முதல் காற்றாலை மின் உற்பத்தி முழுவதுமாக தடைபட்டது. அனல் மின் நிலையங்களில் அவ்வப்போது ஏற்பட்ட கோளாறுகள் மற்றும் புது யூனிட்டுகளில் உற்பத்தி தாமதமானது என்பன உள்ளிட்ட காரணங்களால் மின் உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி 4000 மெகா வாட் அளவைத் தாண்டியது.
இதன் காரணமாக சென்னையில் இரண்டு மணி நேர அறிவிக்கப்பட்ட மின்வெட்டும், பிற மாவட்டங்களில் 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டும் அமல்படுத்தப்பட்டு வந்தது.
நவம்பர் மூன்றாம் வாரம் முதல் குளிர் அதிகரித்ததால், மின் பயன்பாடு அளவு வெகுவாகக் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, மாவட்டங்களில் செய்யப்பட்டு வந்த அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டு ஓரளவு குறைக்கப்பட்டது. 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு என்ற அளவில் இருந்துவந்தது.
இதற்கிடையே, மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில், அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியது. இதன் மூலம், கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தின் மின் உற்பத்தி 9000 மெகா வாட் அளவைத் தாண்டி கிடைத்து வருகிறது.
இனி மின்வெட்டு நிலைமை சற்று மேம்படையும் என்றும் மேலும் மோசமாக வாய்ப்பில்லை என்றும் மின்வாரியத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications