''இல்லி பந்த்பிடி கமலவரே''... பெங்களூரில் செட்டிலாக கமலுக்கு குமாரசாமி அழைப்பு!
பெங்களூர்: நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் தங்க விரும்பாவிட்டால் பெங்களூர் வந்து செட்டிலாகலாம் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
விஸ்வரூபம் விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு பல்வேறு திரைத்துறையினரும், அரசியல்வாதிகளும், பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கர்நாடகத்திலிருந்து அவருக்கு ஆதரவு குவிய ஆரம்பித்துள்ளது.
பெங்களூருக்கு வந்து விடுங்கள் -குமாரசாமி
முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான எச்.டி.குமாரசாமி கூறுகையில்,
கமல் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே சொந்தமானவர். அவரின் விஸ்வரூபம் படத்தைப் பார்த்து திகைத்துவிட்டேன். இந்த படத்தில் அவர் ரூ.100 கோடி இழக்கலாம். ஆனால் அவரது திறமையை வைத்து அவர் பல கோடிகள் சம்பாதிப்பார். தமிழகத்தில் வசிக்க விரும்பாவிட்டால்
அவர் கர்நாடகத்திற்கு வந்துவிடலாம். அவ்வாறு வந்தால் அவரை ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்க கர்நாடக மக்கள் தயாராக இருக்கின்றனர்.
கர்நாடக அரசும், காவல் துறையும் சேர்ந்து இங்கு விஸ்வரூபம் படத்தை திரையிட பாதுகாப்பாக இருப்போம் என்றார். (ஒருவேளை காவிரியிலிருந்து தண்ணி கொடுங்கப்பான்னு சொன்னா மறுபடியும் கமலை மெட்ராஸுக்கு விரட்டி விட்ற மாட்டீங்களே...)
கவிதா லங்கேஷ்
திரைப்பட இயக்குநர் கவிதா லங்கேஷ் கூறுகையில், சென்சார் போர்டு அனுமதித்த எந்தப் படமாக இருந்தாலும் சரி, அதுதான் இறுதி அனுமதி. அதன் பிறகு அந்தப்படம் தியேட்டர்களில் திரையிடப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமையாகும்.
கலையைத் தடுக்க இவர்கள் யார்?
கலை என்றால் அது பார்த்து ரசிக்கத்தான். அதை யாரும் தடுக்கக் கூடாது. கமல்ஹாசன் போன்ற ஒரு கலைஞனை புண்படுத்தி நாட்டை விட்டு வெளியேறும் மன நிலைக்குக் கொண்டு வந்தது வருத்தம் தருகிறது. அவர் ஒரு அருமையான திரைப்படக்காரர், புத்திசாலி மனிதர் என்றார் கவிதா லங்கேஷ்.
என் ஆதரவு கமலுக்கே.. குத்து ரம்யா
நடிகை குத்து ரம்யா கூறுகையில், நான் நிச்சயம் விஸ்வரூபம் படத்தைப் பார்ப்பேன். எனது ஆதரவு கமல்சாருக்கே என்று கூறியுள்ளார்.
ரமேஷ் அரவிந்த்
மிகப் பெரிய சினிமா மேதை கமல்ஹாசன். இளம் தலைமுறை நடிகர்ளுக்கு அவர் ஒரு உத்வேகம்,ஊக்க சக்தி. அருமையான பல படங்களைக் கொடுத்த மேதை. அவருக்கு இப்படி ஒரு சோதனை என்பது வருத்தம், வேதனை தருகிறது.
உரிமைகளுக்காக ஒன்று சேருவோம்- பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் கூறுகையில், நமது உரிமைகளுக்காக திரண்டு நிற்போம். நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை உலகுக்குக் காட்டுவோம். கமல்ஹாசன் என்ற மனிதருக்காக ஒன்று திரண்டு நிற்போம். அவருக்குத் துணை நிற்போம். இது வேறுயாருக்கும் நடக்கக் கூடாது. மலேசியாவில் இந்தப் படததைப் பார்த்தவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக எதுவுமே இல்லை என்று கூறியுள்ளனர். மிகவும் அருமையான படம் இது. அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது என்றார்.
நடிப்புக் கடவுளை ஆதரியுங்கள்... உபேந்திரா
கன்னட நடிகர் உபேந்திரா டிவிட்டரில் கூறியுள்ள செய்தியில், விஸ்வரூபம் முஸ்லீம்களுக்கு எதிரான படம் அல்ல. தீவிரவாதத்திற்கு எதிரான படம். நடிப்புக் கடவுள் கமல்ஹாசனை ஆதரியுங்கள். தயவு செய்து படத்தைப் பாருங்கள், ஆனால் தியேட்டரில் மட்டும் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
இந்தியர்கள் கமல் பக்கம் - சுதீப்
இன்னொரு கன்னட சூப்பர் ஸ்டாரான நான் ஈ பட நாயகன் சுதீப் கூறுகையில், ஒவ்வொரு இந்தியரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவே உள்ளனர். கமல்ஹாசன் இந்தியர்களின் பெருமை. அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. விஸ்வரூபம் படத்தைத் தடை செய்தது வருத்தம் தருகிறது. மிகப் பெரிய சினிமா மேதையை இழிவுபடுத்தி விட்டனர் என்றார்.