சிரியா மீது இஸ்ரேல் விமான தாக்குதல்.. இஸ்ரேலுக்கு சிரியா- ஈரான் எச்சரிக்கை!
பெய்ரூட்: தங்கள் மீது திடீரென தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி தரப்போவதாக சிரியா அறிவித்துள்ளது. இதேபோல் சிரியா மீதான தாக்குதலுக்கு தமது நாடும் பதிலடி கொடுக்கும் என்று ஈரானும் எச்சரித்துள்ளது.
சிரியாவில் கடந்த 2 ஆண்டுகாலமாக உள்நாட்டு கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்குமான யுத்தம் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே ஜாம்ராயா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த அந்த நாட்டின் ராணுவ ஆராய்ச்சி மையம் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறது அண்டை நாடான இஸ்ரேல். இதில் இருவர் பலியாகினர். இதுநாள் வரை லெபனான் மீது தாக்குதல் நடத்திக் கொண்டு ஈரானை மிரட்டிக் கொண்டு இருந்த இஸ்ரேல் தற்போது சிரியா மீது தாக்குதல் நடத்தியிருப்பது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு சிரியாவின் ஆயுதங்கள் கடத்தப்படுவதாலேயே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவுக்கு ஆதரவாக தமது நாடும் தாக்குதல் நடத்தும் என்று ஈரானும் அறிவித்திருக்கிறது.
ஐ.நா. சாசனத்துக்கு எதிராக இஸ்ரேல் நடத்தியிருக்கும் தாக்குதலை ரஷியாவும் கடுமையாக கண்டித்திருப்பது. ஆனால் அமெரிக்காவோ ஹிஸ்புல்லா தீவிரவாதிகளிடம் ஆயுதங்கள் கைமாறாமல் இருக்க சிரியா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications