விருதுநகரில் இருந்து திண்டுக்கல்லுக்கு 'சுற்றி சுற்றி' போன டாக்டர் ராமதாஸ்!!
திண்டுக்கல்: மதுரை, ராமதநாதபுரம் மாவட்டங்களுக்குள் நுழைய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் வேறு வழியே இல்லாமல் சுற்றி சுற்றி திண்டுக்கல்லுக்குள் நுழைந்திருக்கிறார்.
அண்மைக்காலமாக சாதிய அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி தலித்துகளை விமர்சிப்பதும் சாதி மறுப்பு திருமணங்களை எதிர்ப்பதுமாக பேசி வருகிறார் டாக்டர் ராமதாஸ். இதற்காகவே இவர் ராமதநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பல மாவட்டங்களில் நுழைய தடை கோரி மனுவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் விருதுநகரில் சாதிய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் ராமதாஸ். சாலை வழியே சென்றால் மதுரையை தாண்டி செல்ல வேண்டிய நிலை என்பதால் தூத்துக்குடிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் போய் பின்னர் அங்கிருந்து காரில் விருதுநகர் சென்றார். விருதுநகர் கூட்டத்தை முடித்துவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
விருதுநகரில் இருந்து எளிதாக திண்டுக்கல் போக வேண்டுமெனில் எப்படியும் மதுரை மாவட்ட எல்லையைத் தொட்டே ஆக வேண்டும். இதற்காக திண்டுக்கல் செல்வதற்காக மட்டும் அனுமதி கோரி நீதிமன்றத்திலும் மதுரை ஆட்சியரிடமும் பாமகவினர் மனு கொடுத்தனர். ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை.
மதுரை, கள்ளிக்குடி, திருமங்கலம், சமயநல்லூர் 4 வழிச்சாலை வழியாக சென்றால் எளிதாக திண்டுக்கல் சென்றுவிடலாம். ஆனால் அனுமதிதான் கிடைக்கவில்லையே. இதனால் ராமதாஸ் அப்படி ஒரு சுற்று சுற்றி திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.
விருதுநகரில் இருந்து திண்டுக்கல்லுக்கு எப்படி ராமதாச் 'சுற்றி சுற்றி' போனார்? விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி, துவரங்குறிச்சி, வடமதுரை வழியாக திண்டுக்கல் சென்றடைந்திருக்கிறார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்கள் வழியாக திண்டுக்கல் மாவட்டத்துக்குப் போயிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்!