இலவச கிரைண்டர். மிக்சி, ஃபேன் கேட்டு அமைச்சர் பச்சைமாலை முற்றுகையிட்ட மக்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே நடந்த விழாவில் இலவச கிரைண்டர், மிக்சி, ஃபேன் கேட்டு பொதுமக்கள் அமைச்சர் பச்சைமாலை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வனத்துறை அமைச்சர் பச்சைமால் குமரி மாவட்டம் கோவளத்தில் நடந்த இலவச மிக்சி, கிரைண்டர், ஃபேன் வழங்கும் நிகழச்சியில் கலந்து கொண்டார். அங்கு 1,143 பேருக்கு இலவச பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழுசாட்டுபத்து, முருகன்குன்றம், குண்டல், வடக்கு குண்டல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் விழா நடந்த இடத்தில் திரண்டிருந்தனர். அமைச்சர் வந்ததும் அவரை முற்றுகையிட்டனர். இலவச பொருட்கள் வழங்குவதில் பாரபட்சமான நடைமுறை உள்ளது. எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கும் இலவச பொருட்கள் வழங்க வேண்டும் என்றனர். சுமார் 200 பேர் வரை திரண்டு முற்றுகையிட்டனர்.
அப்போது அமைச்சர் பச்சைமால் முதல்கட்ட பட்டியலின்படி அதிகாரிகள் பயனாளிகளை தேர்வு செய்து இருப்பார்கள். வாங்காத பயனாளிகளுக்கு அடுத்தகட்டமாக பொருட்கள் வழங்கப்படும் என்றார். ஆனால் இந்த சமரசத்தை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். அப்போது அமைச்சர் அவர்களிடம் இன்னும் 2 மாதங்களில் அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சென்றார். அதன் பிறகே அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.