3 வயது குழந்தையை கற்பழித்தவருக்கு தூக்கு: நாலே நாளில் விசாரணை, தீர்ப்பு
பாட்னா: பீகார் மாநிலத்தில் 3 வயது குழந்தையை கற்பழித்த 30 வயது உறவுக்கார வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீகார் மாநிலம் கதிஹார் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் ரிஷி(30) தனது உறவினரின் 3 வயது குழந்தையை கடந்த மாதம் 24ம் தேதி கற்பழித்தார். இதை யாரிடமாவது கூறினால் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடுவேன் என்று அந்த குழந்தையை மிரட்டியுள்ளார்.
இது குறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சஞ்சயை கைது செய்தனர். இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 நாட்களுக்குள் விசாரணையை முடித்து குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டதையடுத்து பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் கடந்த 24ம் தேதி நடந்து, 25ம் தேதி குற்றுப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது, 26ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நடந்தது, 29ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
சம்பவத்தை பார்த்தவர்கள் யாருமில்லை. இந்நிலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் டி.கே. ஜா தெரிவித்தார்.
3ம் வகுப்பு சிறுமியை கற்பழிக்க முயன்ற ஆசிரியர்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள அனக்கரையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் மலையாள மொழி ஆசிரியராக பணிபுரிபவர் நெய்யாற்றங்கரையைச் சேர்ந்த ஷீன் சைரஸ்(40). அவர் அந்த பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை கற்பழிக்க முயற்சித்துள்ளார். இது எங்கே பிறருக்கு தெரிந்துவிடுமோ என்று பயந்து அவர் விடுப்பில் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூற அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து வண்டன்மேடு போலீசார் ஆசிரியர் ஷீன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.