முட்டுக்காடு முதலை பண்ணைக்கு செக் குடியரசில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 அனகோண்டா குட்டிகள்
செக் குடியரசு மிருகக்காட்சி சாலையில் இருந்து சென்னை முட்டுக்காடு முதலைப் பண்ணைக்கு 5 அனகோண்டா பாம்பு குட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 பச்சை நிறம் கொண்டவை. அதில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். மற்ற 3 பாம்புகள் மஞ்சள் நிறம் கொண்டவை. இதில் ஒரு ஆண், 2 பெண் பாம்புகள் அடக்கம். தற்போது இவை தலா 8 அடி நீளம் உள்ளன. ஆனால் இவை 25 அடி நீளம் வளரக்கூடியது. நிலத்திலும், நீரிலும் வாழும் தன்மை கொண்ட அனகோண்டா பெரும்பாலும் தண்ணீரில் இருக்கும்.
இதற்காக பிரத்யேகமாக கண்ணாடி அறை தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்குள் தண்ணீர் தேங்கா வண்ணம் ஆறு போன்று ஓடிக்கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது 2 பச்சை நிற அனகோண்டா குட்டிகள் மட்டும் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அனகோண்டாவை பராமரிக்க பாம்பு பண்ணையைச் சேர்ந்த பணியாளருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்காக வெளிநாட்டில் இருந்து சிறப்பு பயிற்சியாளர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
இங்கு அனகோண்டா பாம்புகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் பிற மிருக காட்சி சாலைகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.