அவதூறு வழக்கு: 28ல் நெல்லை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜராக உத்தரவு
நெல்லை: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெல்லை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஜவகர் மைதானத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில் கடந்த 6.8.2012 அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக அரசு வழக்கறிஞர் முத்துக் கருப்பன் நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விஜயகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 500வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜசேகரன் விஜயகாந்துக்கு சம்மன் அனுப்ப கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நெல்லை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கு விசாரணைக்காக விஜயகாந்த் வரும் 28ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி தனபாலன் உத்தரவிட்டார்.