ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி: திருப்பதியில் திரள கொளத்தூர் மணி அழைப்பு
சென்னை: திருப்பதிக்கு வருகை தரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜபக்சே இரத்தம் தோய்ந்த கரங்களோடு பீகாரில் புத்தகயாவுக்கும் திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்துக்கும் வருகிறாராம்;
இந்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து இராஜபக்சேவுக்கு மீண்டும் மீண்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு தந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதி கோயில் நிர்வாகமும் இராஜபக்சேவை கவுரவித்து வேதமந்திரங்களுடன் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இராஜபக்சேவின் வருகைக்கு நமது எதிர்ப்பைக் காட்டிட பிப்ரவரி 8- ந் தேதி காலை 10 மணியளவில் திருப்பதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் பெரும் எண்ணிக்கையில் கருப்புக் கொடிகளுடன் திரளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
திருப்பதியில் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோவும் ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.