கொடைக்கானலில் கணவரை கண்டுபிடித்து தரக் கோரி காவல் நிலையம் முன்பு இளம்பெண் போராட்டம்
திண்டுக்கல்: கொடைக்கானலில் தாலி கட்டிய கணவனை கண்டுபிடித்து தரக் கோரி இளம்பெண் ஒருவர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பில்டிங் சொசைட்டியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (20). இவர் கொடைக்கானலில் உள்ள பிரபல ஹோட்டலில் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இதே ஹோட்டலில் கொடைக்கானல் கீழ் அண்ணா நகரைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்திகேயன்(28) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 28ம் தேதியன்று கார்த்திகேயன் கஸ்தூரியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்று பெற்றோருக்கு தெரியாமல் தனது வீட்டில் தங்க வைத்து, அவரது கழுத்தில் தாலி கட்டி குடும்பம் நடத்தியுள்ளார். மறுநாள் காலையில் திருமண விபரம் கார்த்திகேயன் பெற்றோர்களுக்கு தெரியவரவே தனது மகனை கண்டித்துள்ளனர்.
இதனால் தனது மனைவியை வேறு இடத்தில் வைத்து குடும்பம் நடத்த திட்டமிட்ட அவர், கொடைக்கானல் பேருந்து நிலையத்திற்கு கஸ்தூரியை அழைத்துச் சென்றார். கஸ்தூரியை அங்கேயே நிற்க வைத்து விட்டு தனது நண்பரை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டிக் கிடந்துள்ளது.
இதனால் தனக்கு தாலி கட்டிவிட்டு தன்னை அனாதையாக விட்டுச் சென்ற கணவனை கண்டுபிடித்து தரக்கோரி கொடைக்கானல் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினார் கஸ்தூரி. அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ரகு சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications