சட்டசபையில் திமுகவினர் முதலில் 'வெளிநடப்பு'- பின்னர் கூண்டோடு 'வெளியேற்றம்'!!

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது அதிமுகவின் எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் பேசுகையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. இது முதல்வர் அம்மாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. கருணாநிதி கட்சி அங்கம் வகிக்கும் மத்திய அரசுக்கும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்றார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அடுத்து பேசிய அமைச்சர் வைத்திலிங்கம், கடந்த ஆட்சியிலும் சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் தங்கள் பேச்சின்போது அம்மா பெயரை சொல்லி இருக்கிறார்கள். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி கட்சி இந்த தீர்ப்புக்காக உடனே மத்திய ஆட்சியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்ல மீண்டும் திமுகவினர் கொந்தளித்தனர்.
அவைக் குறிப்பில் நீக்க கோரிக்கை
திமுகவினருக்குப் பதிலடி தருவதற்காக எழுந்த அமைச்சர் முனுசாமி, எந்த கருத்தையும் உறுப்பினர் தவறாக பேசவில்லை. கருணாநிதி கட்சி என்றுதான் குறிப்பிட்டார். அவர் தி.மு.க.வில் உறுப்பினராக இருக்கிறாரா? இல்லையா? என்று கேள்வி எழுப்ப மு.க.ஸ்டாலின் வேகமாக எழுந்தார். அவர், முன்னாள் முதல்வர், தலைவர் பெயரை உறுப்பினர் குறிப்பிட்டு பேசினார். அதுபோல் நாங்களும் பேச வாய்ப்பு கொடுப்பார்களா? கடந்த ஆட்சியில் சில உறுப்பினர்கள் அ.தி.மு.க. தலைவர் பெயரை குறிப்பிட்டு பேசியபோது அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இப்போதும் அதே முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரினார்.
ஆனால் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எழுந்து, கடந்த ஆட்சியின் போது தி.மு.க. உறுப்பினர்கள் அம்மா பெயரை குறிப்பிட்டு பேசியபோது ஒருமுறை நீக்கினார்கள். ஆனால் அதன்பின்பு பலமுறை பேசியிருக்கிறார்கள். அவை இது இப்போதும் அவைக் குறிப்பில் இருக்கிறது என்றார். அப்போது குறுக்கிட்டு சபாநாயகர் தனபால், அமைச்சர் விளக்கம் அளித்து விட்டார். அனைவரும் உட்காருங்கள் என்றார்.
மானம் இருந்தால்....
ஆனால் அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் எழுந்து, தீர்ப்பு வெளியான உடனேயே மத்திய அரசில் இருந்து தி.மு.க. ராஜினாமா செய்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் இதுவரை தமிழகத்துக்கு செய்யப்பட்ட துரோகத்துக்கு பிராயசித்தமாக இருந்திருக்கும். மானம் உள்ளவர்களுக்குத்தான் இது பொருந்தும். இவர்களுக்கு பொருந்துமா? என்று தெரியவில்லை. இந்த தீர்ப்பு இந்திய வரலாற்றில ஒரு மணி மகுடம். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்றார்.
வாய்ப்பு கேட்ட ஸ்டாலின்
ஏற்கெனவே கொந்தளிப்பில் இருந்த திமுகவினர் கடுமையாக ஆட்சேபித்து குரல் எழுப்பினர். ஆனால் விஜயபாஸ்கர் விடுவதால இல்லை. "மக்கள் நலம்... மக்கள் நலம்... என்றே சொல்லுவார்... தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்... என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப கடந்த காலத்தில் ஆட்சி நடந்தது. அவர்கள் சுவிஸ் வங்கியில் கணக்கை அதிகரிப்பதில்தான் கவனம் செலுத்தினார்கள்" என்று சொல்ல கடுமையாக கோபமடைந்தனர் திமுக உறுப்பினர். தாம் பதிலளிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வாய்ப்பு கேட்டார்.
வாய்ப்பு கொடுக்க அமைச்சர் எதிர்ப்பு
அப்போது அமைச்சர் முனுசாமி, சபாநாயகர் எழுந்து நின்றால் உறுப்பினர்கள் உட்கார வேண்டும் என்பது விதி. ஆனால் நீங்கள் எழுந்து நின்றபிறகும் அவர்கள் உட்காரவில்லை. அவர்கள் கட்சி தலைவர் சொன்னால்தான் உட்காருகிறார்கள். அவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க வேண்டும்? என்றார்
"முந்தைய ஆட்சியில் பணத்தை தவறாக சுவிஸ் வங்கியில் போட்டதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டை உறுப்பினர் அவையில் பேசுகிறார். எனவே அதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்று மீண்டும் ஸ்டாலின் கூற, சபாநாயகரோ, கடந்த ஆட்சி என்றுதான் சொன்னாரே தவிர உங்களை குறிப்பிட்டு சொல்லவில்லை என்றார்
வெளிநடப்பு
விஜயபாஸ்கரும் சும்மா இருப்பதாக இல்லை... "சுவிஸ் வங்கியில் இல்லை என்றால் வேறு எந்த வங்கி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்" என்று சொல்ல மீண்டும் ஸ்டாலின் எழுந்தார். ஆனால் அவரை பேச விடவில்லை. இதனால் திமுகவினர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
சபையில் இருந்து வெளியேறிய பின் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் மீது ஆளும் கட்சியினர் திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்புகின்றனர். சட்டசபையில் ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டுவிட்டது என்றார்.
வெளியேற்றம்
இந்த வெளிநடப்புக்குப் பின்னர் மீண்டும் திமுகவினர் அவைக்கு சென்றனர். அப்போது ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர்கள் சிலர், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிடாததற்கு திமுகதான் காரணம் என்று பேசினர். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது, காவிரி நதிநீர் பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை என்று அமைச்சர்கள் கூறினர். மேலும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாகவும் அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கு திமுகவினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.
திமுகவுக்கு எதிரான பேச்சுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி சபாநாயகர் இருக்கை முன்பாக திமுகவினர் திரண்டனர். பின்னர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் திமுக உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து திமுகவினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். விவசாயிகள் தற்கொலை அல்ல திமுகவினர் வெளியேற்றப்பட்ட நிலையில் சட்டசபையில் விளக்கம் அளித்த நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்தில் வறட்சியால் எந்த விவசாயியும் தற்கொலை செய்யவில்லை. இயற்கை மரணங்களை சிலர் தற்கொலைகளாக மாற்றிச் சொல்கின்றனர் என்று மீண்டும் விளக்கம் அளித்தார்












Click it and Unblock the Notifications