சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

காவிரி பிரச்சனை குறித்த வழக்கு விசாரணையின்போது டெல்டா மாவட்டங்களில் வாடும் பயிர்களை காக்க தமிழக அரசு மேட்டூர் அணையில் இருந்து உடனே 2 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மேட்டூர் அணை பாசனம் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12 தேதி முதல் ஜனவரி மாதம் 28ம் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததுடன், கர்நாடக அரசும் தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்ததாலும் அணையில் தண்ணீரின் அளவு குறைவாக இருந்தது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதம் 17ம் தேதி தான் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணைக்கு நீர் வரத்து அவ்வளவாக இல்லாததால் டிசம்பர் 22ம் தேதி பாசனத்திற்காக திறந்துவிடப்படும் நீரின் அளவு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
மழை இல்லாததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் முகத்தில் மலர்ச்சி தெரிகிறது.












Click it and Unblock the Notifications