திருவண்ணாமலை: சிறுமியை பலாத்காரம் செய்தவனுக்கு ஏழரை ஆண்டு கடுங்காவல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான இரண்டு குழந்தைகளின் தந்தைக்கு ஏழரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து செய்யாறு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி செய்யாறை அடுத்த ஞானமுருகன்பூண்டி பகுதியில் வசிக்கும் விவசாயி வெங்கடேசனின் மகளாவார். திருவோத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி,கடந்த 21.11.2007 தேதி மாலை டியூஷன் செல்வதற்காக திருவோத்தூர் ஆற்றங்கரைப் பகுதிக்கு சென்றபோது அனக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை வெங்கடேசன், செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆரியமாலா வழக்குப் பதிவு விசாரணை செய்தனர். இதனையடுத்து பாலாஜியை கைது செய்து செய்யாறு உதவி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். குற்றவாளி பாலாஜிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனினும் சிறுமியை பலாத்காரம் செய்து சீரழித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் உண்மையென தெரிய வரவே, குற்றம் சாட்டப்பட்ட பாலாஜிக்கு, இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் படி 7 ஆண்டும், சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக 506(1)பிரிவின் படி 6 மாதமும் கடுங்காவல் தண்டனை விதித்தார்.
மேலும் அபராதத் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த அபராதத் தொகையினை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கி உதவிட வேண்டும் என்றும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் செய்யாறு உதவி அமர்வு நீதிபதி ஏ.கோபால் தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குற்றவாளியான பாலாஜி(35)யை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.