நாக்கு கடி நாராயணன், வைகை கரை வாத்து... விஜயகாந்த்துக்கு 'அபிஷேகம்'...விழுந்து விழுந்து சிரித்த ஜெ.!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் சட்டசபையில் கடுமையாக தாக்கிப் பேசியதைக் கேட்டு முதல்வர் ஜெயலலிதா இடைவிடாமல் சிரித்தபடி ரசித்துக் கேட்டார்.
தமிழக சட்டசபையில் நேற்று நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது விஜயகாந்த்தை பலரும் சரமாரியாக விமர்சித்தனர். மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒரு பக்கம் போட்டுத் தாக்கினார்.
இன்னொரு பக்கம் அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் தன் பங்குக்கு மிகக் கடுமையாக விஜயகாந்த்தை திட்டித்தீர்த்தார். நேரடியாக விஜயகாந்த் பெயரைச் சொல்லாமல் அவர் கடுமையாக விமர்சித்தார். ஒரு கதை போல சொல்லி விஜயகாந்த்தை அவர் விமர்சித்தார்.
விஜயபாஸ்கர் சொன்ன கதை இதுதான்...

தவறி இறங்கிய 'குரூப்'...
ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், தமிழகத்தில் இருந்து, டெல்லி சென்று கொண்டிருக்கிறது. அதில் சென்ற, ஒரு குரூப், வழியில், ஒரு ஸ்டேஷனில், தவறி இறங்கிவிட்டது.

குரூப் 'கேப்டனுக்கு' நிதானம் இல்லை...
குரூப் கேப்டன் நிதானம் இல்லாமல், கூட வந்தவர்களின் தலையை தட்டுகிறார்; நாக்கை துருத்தி, கடிக்கிறார். ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று, அடுத்த ரயில் எப்போது வரும் என கேட்க, மாலை 6:00 மணிக்கு வரும் என்கிறார்.

ஐந்து ரவுண்டு போன 'கேப்டன்'
அப்படியா என கேட்டுவிட்டு, பக்கத்தில் ஒரு, ரவுண்டு போய் வருகிறார். இப்படியே, ஐந்து ரவுண்டு போகிறது.

தண்டவாளத்தைக் கடக்கனும்...
மீண்டும் ரயில் எப்ப வரும் என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்க,இனிமே, இரவு 9:00 மணிக்கு, கூட்ஸ் ரயில் தான் வரும். ஆமாம்... நீங்க, எங்க தான் போகணும்? என, ஸ்டேஷன் மாஸ்டர் திருப்பி கேட்டுள்ளார். அதற்கு, தண்டவாளத்தை, கடக்க வேண்டும் என, கேப்டன் கூற, அட... கொடுமையே... என, ஸ்டேஷன் மாஸ்டர் தலையில் அடித்துக் கொண்டார்.

29 பேரில் 4 பேர் காணோம்...
இந்த களேபரத்தில், 29 பேரில், 4 பேரை காணாமல் தேட, அவர்களோ, எக்ஸ்பிரஸ் ரயிலில், புத்திசாலித் தனமாக பயணிப்பது, பின்னர் தெரிந்தது.

'நாக்குக்கடி' நாராயணன்
நாக்கில் வந்ததை எல்லாம், மைக்கில் பேசி வரும் நாக்கு கடி நாராயணன், கோர்ட்டுகளுக்கு நடையாய் நடக்கிறார்.

வாய் வழியே கேள்வி கேட்டால் கை வழியே பதில்
நிருபர்கள், வாய் வழியே கேள்வி கேட்டால், கை வழியே பதில் சொல்லும் பழக்கத்தை கொண்ட, வைகை கரை வாத்து, முன் ஜாமினுக்கு, முண்டி அடிக்கிறது. என்னதான் முண்டி அடித்தாலும், அது போய் சேரும் இடம், செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது.

உன்னைப் பார்த்து உலகம் சிரிக்கிறது
அவரை நினைக்கும்போது, உன்னைப் பார்த்து, இந்த உலகம் சிரிக்கிறது; உன்னைப் பார்த்து, உன் நிழலும் வெறுக்கிறது என்ற எம்.ஜி.ஆர்., பாடல் தான், நினைவுக்கு வருகிறது என்று பேசினார் விஜயபாஸ்கர்.

இடைவிடாமல் சிரித்த 'அம்மா'..
விஜயபாஸ்கர் கதை சொல்லச் சொல்ல அதை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து சிரித்தபடி கேட்டு ரசித்தார்.












Click it and Unblock the Notifications