காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவிரி நதி நீர்ப் பிரச்சனை குறித்து 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. 5 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடவேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியபோது, டிசம்பர் இறுதிக்குள் வெளியிடுவோம் என மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் அறிவித்தார்.
ஆனால் அது நடக்கவில்லை. மீண்டும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. 2வது முறையும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தினுடைய அறிவுறுத்தலை அமலாக்கவில்லை.
தீர்ப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆன பிறகும், தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையே 5 ஆண்டு காலமாக மீறி வருகிறது என மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வன்மையாக கண்டித்ததோடு, பிப்ரவரி மாதம் 20ம் தேதிக்குள் நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.