கொலைக்கு முன்பு கொடைக்கானலில் பொட்டு சுரேஷ்… செல்லில் பேசிய சென்னை பெண்.. யார்?

பொட்டு சுரேஷ் கடந்த மாதம் 31-ந் தேதி மதுரை டி.வி.எஸ் நகர் பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அட்டாக் பாண்டி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மதுரை கீரைத்துறையை சேர்ந்த சபா என்கிற சபாரத்தினம் (வயது 25), சந்தானம் (24), உள்ளிட்ட 7 பேர் சரணடைந்தவர்கள். அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல் சென்ற பொட்டு
இதற்கிடையில் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட தினத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்து தங்கியதாக போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. கொலை நடந்த அன்றுதான் பொட்டு மதுரைக்கு திரும்பியிருக்கிறார். அவர் எதற்காக கொடைக்கானல் போனார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
கடந்த சில நாட்களில் அவருடன் செல்போனில் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை பார்த்த போது முக்கிய அதிமுக அமைச்சர்களின் உதவியாளர்கள் இருவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
சென்னைப் பெண் யார்?
இதேபோல் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரும் பொட்டு சுரேஷ் உடன் அடிக்கடி பேசியிருக்கிறார். இந்த தகவல்களை உளவுத்துறையினர் தனியாக ரிப்போர்ட் அனுப்பியிருக்கின்றனர்.
ஹோட்டலில் விசாரணை
இந்த தகவலை அடுத்த மதுரை தனிப்படை போலீசார் கொடைக்கானல் ஹோட்டலில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பொட்டு சுரேஷ் கடந்த 28-ந்தேதி கொடைக்கானலில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் நட்சத்திர ஓட்டலில் 2 அறை எடுத்துள்ளார். அவருடன் 3 பேர் வந்துள்ளனர். ஒவ்வொரு அறையிலும் 2 பேர் தங்கியுள்ளனர். பொட்டு சுரேஷை கட்சிகாரர்கள் யாரும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் பொட்டு சுரேஷ் தன்னுடன் வந்தவர்களுடன் அறையை விட்டு வெளியே செல்லவில்லை. அவரது அறைக்கு அடிக்கடி டீ, காப்பி மட்டும் அனுப்பப்பட்டதாம். கொடைக்கானலில் இருந்து மதுரை செல்லும் போது, நட்சத்திர ஓட்டலின் வரவேற்பு அறையில் அடுத்த வாரம் குடும்பத்துடன் வருவதாக கூறியுள்ளார் என்பது மட்டும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தலைநகரம் சொல்லிருச்சு
இதனிடையே கொலை செய்யப்பட்ட 7 பேரும் எங்க தலைநகரத்தையே குறி வச்சாரு... நாங்க விடுவோமா? . தலைநகரம் சொன்னாரு நாங்க செஞ்சோம் என்று கூறினார்களாம். சந்தேக லிஸ்ட்டில் உள்ள அட்டாக் பாண்டிக்குதான் அப்படி ஒரு பட்டத்தை கொடுத்துள்ளனராம் இந்த ஆட்கள் என்கின்றனர் போலீசார்.
யார் அந்த 5 பேர்
இதற்கு நடுவே அட்டாக் பாண்டிக்கு யாராவது அசைன்மென்ட் கொடுத்து இந்த கொலையை செய்தாரா என்று போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலை நடந்த உடன் இருவரும் அட்டாக் பாண்டியிடம் பேசியிருக்கின்றனர். அப்போது பாண்டியின் செல்போன் தாம்பரம் பகுதியில் இருந்த விபரம் போலீஸ் வசம் சிக்கியுள்ளது.
இதைத் தவிர பொட்டு சுரேஷ் கொலையான போது அவரது சடலத்தைப் பார்க்க வந்த அழகிரியிடம், பொட்டுவின் மனைவி, இந்த கொலைக்குக் காரணம் அந்த 5 பேருதான் அவங்க யாருன்னு உங்களுக்கே தெரியும் என்று கூறி அழுதார். அந்த 5 பேரில் பி.எம்.மன்னன்,மூர்த்தி ஆகியோரும் அடக்கம் என்பதால் தனித்தனியாக சந்தேக வலையை விரித்துள்ளது போலீஸ் டீம்.












Click it and Unblock the Notifications