ஷிண்டேவை பிரதமர் டிஸ்மிஸ் செய்யாவிட்டால் பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணிப்போம்: வெங்கையா நாயுடு
திருச்சி: பாஜக, ஆர்.எஸ்.எஸ். பற்றி கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் தேசிய தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ் அரசு மோசமான காலகட்டத்தில் இருக்கிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார். அவரின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
அப்படி என்றொல் காங்கிரஸ் தலைமை சொல்லாமல் ஷிண்டேவாக இதை கூறியிருக்க மாட்டார். ஷிண்டே தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பிரதமர் மன்மோகன் சிங் ஷிண்டேவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லை என்றால் வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை பாஜக புறக்கணிக்கும்.
ஷிண்டேவின் கருத்து பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு காதில் இசை பாயந்தது போல் உள்ளது. அதனால் அந்த கருத்து தேசத்திற்கு எதிரானது என்று கூட கூறலாம். டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அம்மாநில முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸைச் சேர்ந்த ஒரு முதல்வரே இதை ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம் நம் நாட்டின் பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஊழல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என அனைத்திலும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு இரு கட்சிகளுக்கு இடையேயான பிரச்சனை கிடையாது. இரு மாநில அரசுகள் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று பத்திரிக்கைகளில் தான் செய்தி வந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் அப்படி இதுவரை அறிவிக்கவில்லை.
பாஜகவின் பிரதமர் வேட்பாளரை கட்சியில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். இது குறித்த எனது கருத்தை கூற முடியாது. அகில இந்திய அளவில் 3வது அணி அமையும் என்ற பேச்சு கானல் நீராகத் தான் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications