சட்டசபை கூட்டத் தொடர் இன்று முடிகிறது; ஜெயலலிதா பதிலுரை- திமுக புறக்கணிப்பு
சென்னை & திருச்சி: சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுரையோடு முடிவுக்கு வருகிறது.
ஆனால், இன்றைய கூட்டத்தை திமுக புறக்கணிக்கவுள்ளது. இதில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் ரோசய்யாவின் உரையோடு கடந்த 1ம் தேதி தொடங்கியது.
அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உரையாற்றினர்.
அப்போது ஏற்பட்ட மோதலையடுத்து திமுக எம்எல்ஏக்கள் சில முறை வெளிநடப்பு செய்தனர். இரு முறை வெளியேற்றப்பட்டனர். நேற்று 14 திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந் நிலையில் எம்எல்ஏக்களின் விவாதங்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பதிலளித்து உரையாற்றுகிறார்.
முன்னதாக, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகிறார். சட்டப் பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றுடன் பேரவை ஒத்திவைக்கப்படுகிறது.
திமுக பங்கேற்பில்லை:
இந் நிலையில் திருச்சி மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலை ஜி கார்னரில் ரயில்வே மைதானத்தில் நேற்றிரவு நடந்தது.
அதில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்ற கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச முடியவில்லை. டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்றால் ஏற்க மறுக்கிறார்கள்.
விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை இயற்கை சாவு தான் என்று அதிமுக அமைச்சர்கள் பதிவு செய்கின்றனர். இதையும் தாண்டி பேசினால் தடுத்து நிறுத்துகின்றனர். சட்டமன்ற கூட்டம் நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் நடந்த கூட்டத்தில் ஒருவர் கூட முழுமையாக பேச முடியவில்லை.
இதனால் திமுக உறுப்பினர்கள் யாரும் அவைக்கு செல்ல வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறிவிட்டார். இதனால் திமுகவினர் சட்டமன்ற கூட்டத்திற்கு நாளை செல்வது இல்லை என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications