2001 டிச.13 நாடாளுமன்ற தாக்குதல் முதல் 2013 பிப்.9 தூக்கு வரை….
டெல்லி: 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்திற்குள் காரில் 5 தீவிரவாதிகள் நுழைந்தனர். அப்போதைய துணை குடியரசுத் தலைவர் கிருஷ்ணகாந்தின் மீது மோதிய தீவிரவாதிகள், உடனடியாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதையடுத்து துணைக் குடியரசுத்தலைவரின் பாதுகாவலர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதனால் நாடாளுமன்றம் முழுவதும் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ந்தது.
அந்த நேரத்தில் மாநிலங்களவையும், மக்களவையும், 40 நிமிட நேரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.
பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் தீவிரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர்.நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் வளாகத்தில் நின்றிருந்த எம்.பி.க்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
எத்தனை உயிர்பலி
2001 டிசம்பர் 13 நடைபெற்ற தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இதில் 5 பேர் தீவிரவாதிகள், 7 பேர் பாதுகாப்பு படையினர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கைதும் விசாரணையும்...
2001, டிசம்பர் 15 - அப்சல் குரு, பேராசிரியர் ஹூலானி, அப்சன், செளகத் ஹூசைன் ஆகியோர் கைது. தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதால் அந்நாட்டு அரசிடம் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தியது. 2001,டிசம்பர் 25- ஜெய்ஷ் இ முகமது தலைவர் மவுலானா மசூத் அஷாரை கைது செய்தது பாகிஸ்தான்.
சிக்கியது எப்படி
நாடாளுமன்றத்தை தாக்கிய 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளும், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இந்த தாக்குதலை தூண்டியது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் புலனாய்வு குழு இறங்கியது. தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளில் லஸ்கர்-இ-தொய்பா தவிர ஜெய்ஸ்-இ- முகமது இயக்கத்தை சேர்ந்தவர்களும் இருப்பது தெரிய வந்தது.
அப்போது அப்சல்குரு பக்கம் புலனாய்வு குழு விசாரணை திரும்பியது.
குற்றம் நிரூபணம்
காஷ்மீரை சேர்ந்த அப்சல்குரு ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன். எனவே அப்சல் குருவுக்கு நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பு இருக்கும் என்று கருதி அவனை போலீஸ் கைது செய்தது. அவன் மீதான குற்றம் நேரில்கண்ட சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது.
குற்றச்சாட்டு பதிவு
2001, டிசம்பர் 29 - அப்சல் குரு 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். 2002, ஜூன் 4 - அப்சல் குரு உள்ளிட்ட 4 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 2002,டிசம்பர் 14- மவுலானா மசூத் அஷாரை விடுவிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
தூக்கு தண்டனை அறிவிப்பு
2002,டிசம்பர் 18 : நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல்குரு, ஷாகத்உசைன், பேராசிரியர் கிலானி ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்சன்குரு விடுதலை செய்யப்பட்டார். 2003,அக்டோபர் 29 - பேராசிரியர் ஹூலானி வழக்கில் இருந்து விடுவிப்பு
என்கவுண்டரில் கொலை
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தேடப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் ஹாஸி பாபா 2003-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்ரீநகரில் எல்லைப் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இதேபோல் இந்த வழக்கில் தேடப்பட்ட மேலும் 3 தீவிரவாதிகளும் ஸ்ரீநகரில் 10 மணி நேரத்துக்கு மேல் நீடித்த என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தண்டனை நிறைவேற்ற உத்தரவு
2004,ஆகஸ்ட் 4 - அப்சல் குருவின் தூக்குத் தண்டனை உறுதியானது. செளகத்தின் தண்டனை குறைக்கப்பட்டது.2006,செப்டம்பர் 26- அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவு. 2006, அக்டோபர் 3 - அப்சல் குருவின் மனைவி குடியரசுத்தலைவருக்கு கருணை மனு. 2007 ஜனவரி 12- மறுபரீசிலனை செய்யக்கோரிய அப்சல் குருவின் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிப்பு.
கருணை மனு நிராகரிப்பு
2012 டிசம்பர் 10- அப்சல் குருவின் கருணை மனுவை பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
2013 பிப்ரவரி 3- கருணை மனுவை 6 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து 2013, பிப்ரவரி 9 காலை 8 மணிக்கு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்












Click it and Unblock the Notifications