வேட்பாளர் தேர்வில் புது 'டெக்னிக்' கடைபிடிக்க ராகுல் 'அட்வைஸாம்'
ஜெய்ப்பூர் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்களை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
மிகவும் முக்கியமாக தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ராகுல். தேர்தல்களில் கட்சியின் வேட்பாளர் தேர்வு முறை தொடர்பாக விவாதிக்க மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தை ராகுல் காந்தி வரும் 15-ந் தேதி நடத்துகிறார். காங்கிரஸ் துணைத் தலைவரான பிறகு மாநில காங்கிரஸ் தலைவர்களைச் அவர் சந்திப்பது இதுவே முதல் முறை.
அனேகமாக வேட்பாளர் தேர்வு தொடர்பாக மேலிடத்துக்கு அதிகாரமளித்து மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஒரு வரித் தீர்மானம் இயற்றி அனுப்பும் நடைமுறைகள் இனி இருக்காது என்று கூறப்படுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 9 மாநில சட்டசபை தேர்தல்களுடன் லோக்சபா தேர்தல் நடைபெறலாம் என்ற நிலையில் ராகுலின் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.