ஆத்தூர் அருகே தேமுதிகவினரை ஓட ஓட விரட்டி தாக்கிய அதிமுகவினர்: போலீசார் குவிப்பு
சேலம்: ஆத்தூர் அருகே தேமுதிகவினரை அதிமுகவினர் ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது தலைவாசல். அங்கு தேமுதிக கொடியை நடுவதற்காக தலைவாசல் ஒன்றிய செயலாளர் அருள்வேல், நிர்வாகி சங்கர் தலைமையில் கட்சியினர் குழி வெட்டினர். அப்போது அதிமுக மாணவர் அணி ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார்.
அவர் கொடி நட்ட குழி தோண்டிக் கொண்டிருந்த தேமுதிகவினரை ஓட ஓட விரட்டி தாக்கினார். இதையடுத்து தேமுதிகவினர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் கெங்கவல்லி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சுபா தலைமையில் தலைவாசலில் கட்சிக் கொடியை நட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி. மாணிக்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் தலைவாசலில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications