உண்மையிலேயே தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டதா கர்நாடகம்...?

Subscribe to Oneindia Tamil

Did really Karnataka release water in Cauvery?
பெங்களூர்: கர்நாடக அணையிலிருந்து அந்த மாநிலம் தண்ணீர் திறந்து விட்டு ஐந்து நாட்களாகியும் கூட இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்குள் நுழையவில்லை. இதனால் தண்ணீரே திறக்காமல் கர்நாடகம் நாடகமாடியுள்ளதா என்ற பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

காவிரி ஆறு வறண்டு போயிருப்பதால் பாதி நீரை ஆறே ஈர்த்துக் கொள்ளும், மீதமுள்ள நீர்தான் வந்து சேரும், அதுவும் கூட தாமதமாகத்தான் வரும் என்று கர்நாடகத்தின் தரப்பில் கூறப்பட்டாலும் கூட இத்தனை நாள் தாமதத்திற்கு வாய்ப்பே இல்லை என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மத்திய நீர் ஆணையத்துறை அதிகாரிகளும் திட்டவட்டமாக கூறுவதால் கர்நாடகத் தரப்பில் மோசடி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடகம் திறந்துவிட்டதாகக் கூறப்படும் தண்ணீர் தமிழக எல்லைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வரை வரவில்லை. இதனால் தண்ணீர் வரத்தைக் கண்காணித்து வரும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களைக் காப்பாற்ற மத்திய நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில், கர்நாடகம் உடனடியாக 2.44 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 7ஆம் தேதி உத்தரவிட்டது.

இதன்படி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து கடந்த 9ஆம் தேதி, வினாடிக்கு 1,250 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. வழக்கமாக கர்நாடக அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது 48 மணி நேரத்தில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும். ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு வரையிலும் பிலுகுண்டுலுவுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் மத்திய அரசின் நதிநீர் ஆணையக் குழுவினர் தினமும் காவிரியில் தண்ணீரின் அளவை கணக்கிட்டு வருகின்றனர். இவர்களுடன், தமிழக, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பொதுப் பணித்துறை பொறியாளர்களும் படகுகளில் பிலிகுண்டுலுவுக்கு சென்று அங்குள்ள அளவுகோலில் தண்ணீர் நிற்கும் அளவைக் கணக்கிடுகின்றனர்.

மேலும், நவீன கருவிகளை தண்ணீருக்குள் செலுத்தி தண்ணீர் வரும் வேகம், அதன் அடர்த்தி ஆகியவற்றை கணக்கிட்டும் கூடுதலாகத் தண்ணீர் வருகிறதா என்பதையும் உறுதி செய்கின்றனர்.

தினமும் காலை தொடங்கி மாலை வரையிலும் இந்த ஆய்வு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுகிறது. இப்போது, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமிருப்பதால் தமிழகம், கர்நாடகம், மத்திய அரசு அதிகாரிகள் தண்ணீரின் அளவை கவனமாகக் குறிப்பெடுத்து வருகின்றனர்.

கர்நாடக அரசானது சனிக்கிழமை தண்ணீர் திறந்துவிட்டது. ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு வரையிலும் தண்ணீரானது பிலிகுண்டுலுவுக்கு வந்து சேரவில்லை. இதனால், செவ்வாய்க்கிழமை ஆய்வுக்குச் சென்ற தமிழக, மத்திய அரசு அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.

தண்ணீர் திறந்து 4 நாள்களாகியும் வராமலிருப்பதால் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் திறந்ததா என்பதில் சந்தேகம் வலுத்துள்ளது. காவிரி வறண்ட நிலையில் இருப்பதால் பள்ளங்களை நிரப்பி பிலுகுண்டுலுவுக்கு வந்து சேர தாமதம் ஏற்படும் என கர்நாடகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், அதற்கு 4 நாள் அவகாசம் தேவையில்லை. அதிகபட்சம் இரண்டரை நாள்களே போதுமானது என்கின்றனர் தமிழக அதிகாரிகளும், மத்திய அரசின் நீர்வள ஆணையக் குழுவினரும்.

இதுதொடர்பாக பிலிகுண்டுலுவில் உள்ள இந்தக் குழுவைச் சேர்ந்த மத்திய அரசு பொறியாளரான அஷ்ரப் கூறுகையில், கர்நாடகம் திறந்துவிட்டதாகக் கூறப்படும் தண்ணீரானது செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணி வரை வந்து சேரவில்லை. தினமும் மாலை 6 மணி வரையில் மட்டுமே தண்ணீரின் அளவைக் கணக்கிடுவோம்.

ஆனால், செவ்வாய்க்கிழமை கூடுதலாக ஒரு மணிநேரம் காத்திருந்தும் தண்ணீர் வரத்தை உறுதி செய்ய முடியவில்லை. மீண்டும் புதன்கிழமை காலை ஆய்வு தொடங்கும். அப்போதுதான் தண்ணீர் வந்ததா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என்றார் அவர்.

தற்போது இன்றுடன் 5 நாட்களாகி விட்டதால் கர்நாடகம் உண்மையிலேயே தண்ணீர் திறந்து விட்டுள்ளதா என்பதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

காவிரி நதி | கர்நாடக மாநிலம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+