குறைந்த தண்ணீர் திறந்து விட்ட கர்நாடகம் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது தமிழகம்

காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை காப்பாற்ற மத்திய நிபுணர் குழுவினர் பரிந்துரையின் பேரில் கர்நாடக அரசு உடனடியாக 2.44 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 7-ந் தேதி உத்தரவிட்டது.
அதன்படி கிருஷ்ணா ராஜசாகர் அணையில் இருந்து கடந்த 9-ந் தேதி வினாடிக்கு 1, 250 கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட்டதாக அறிவித்தது. ஆனால் இந்தத் தண்ணீர் இதுவரை தமிழகத்திற்குள் வரவில்லை. தொடர்ந்து மத்திய அதிகாரிகள், தமிழக அதிகாரிகள் தண்ணீர் வரத்துக்காக காத்துள்ளனர். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டதாக கூறி 5 நாட்களாகி விட்டது.
இதையடுத்து தற்போது தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதில், காவிரி டெல்டா விவசாயிகளின் அவசர தேவைக்காக கர்நாடக அரசு உடனடியாக 2.44 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசு இந்த உத்தரவை மதிக்கவில்லை.
கிருஷ்ணாராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி திறக்கப்பட்டதாக கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியிருந்தார். ஆனால் 127 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதே அளவில் தண்ணீர் வந்தால் 2.44 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணை வந்துசேர 240 நாட்கள் ஆகும். இது கோர்ட் உத்தரவை அவமதிக்கும் செயலாகும்.
எனவே, கோர்ட் உத்தரவுபடி தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையான அளவு தண்ணீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் தவிர நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட 5 பேர் மீது இந்த வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications