பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசிய வயலார் ரவி... மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
திருவனந்தபுரம்: மலையாள தனியார் தொலைக்காட்சி பெண் நிருபரிடம் மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆபாசமாக பேசியது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆபாச பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஆலப்புழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் வயலார் ரவியிடம், சூரியநெல்லி சிறுமி பலாத்கார வழக்கில் மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே குரியன் தொடர்பு குறித்து ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சி பெண் நிருபர் கேள்வி கேட்டார். முதலில் தன்னால் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று வயலார் ரவி மறுத்து விட்டார்.
ஆனால், அந்த பெண் நிருபர் மீண்டும், மீண்டும் கேள்வி கேட்டதால் எரிச்சலடைந்த வயலார் ரவி, ‘‘உனக்கு குரியன் மீது ஏன் இவ்வளவு கோபம். அவருக்கும் உனக்கும் என்ன தொடர்பு. அவருடன் எதாவது முன் அனுபவம் உள்ளதா'' என கேட்டு விட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.
வயலார் ரவியின் ஆபாசமான பேச்சால் நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் கூடிய பெண் பத்திரிகையாளர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசிய வயலார் ரவியை வன்மையாக கண்டிப்பதுடன் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சூரியநெல்லி சிறுமி பலாத்கார வழக்கு கேரளாவில் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் பதவி விலக கோரி கேரளாவில் பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வயலார் ரவியின் ஆபாச பேச்சு அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications