7 மாதங்களில் 7 பேரின் கருணை மனுக்கள் தள்ளுபடி- லோக்சபா தேர்தல் வரை இப்படித்தானோ?
டெல்லி: கடந்த 7 மாதங்களில் 7 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் வரலாற்றிலேயே இவ்வளவு வேகமாக எந்த ஒரு கருணை மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.
இதுவரை இந்தியாவில் எந்த ஒரு காலகட்டத்திலும் இத்தனை பேரை தூக்கிலிட்டதும் இல்லை என்ற நிலையும் வேகமாக வந்து விட்டது. அந்த அளவுக்கு குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகள் படு வேகமாக உள்ளன.
எங்கு பார்த்தாலும் தூக்குத் தண்டனைதான் என்ற அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. அடுத்து யாருக்குத் தூக்கு, நாளைக்கு யாருக்கு தூக்கு என்று மக்கள் ஹாஸ்யமாக பேசும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது.
லோக்சபா தேர்தலை மனதில் கொண்டும், ஒரு தரப்பினரை சமாதானப்படுத்த இன்னொருவர், இவரை சமாதானப்படுத்த அவர் என்ற அளவுக்கு மாறி மாறி சரமாரியாக பலரையும் தூக்கில் போட மத்திய அரசு முடிவு செய்து விட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன.

7 மாதங்களில் 7வது நிராகரிப்பு
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று 7 மாதங்களாகிறது. இந்த காலகட்டத்தில் இதுவரை 7 பேரின் கருணை மனுக்களை அவர் நிராகரித்துள்ளார்.

முதலில் கசாப்புக்குத் தூக்கு
நிராகரிக்கப்பட்டவர்களில் முக்கியமானவன் பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கசாப். இவனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் முதலில் நிராகரித்தார். இதையடுத்து உடனடியாக தூக்கிலிடப்பட்டான் கசாப். இந்தத் தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்பட்டது.

2வது தூக்கு அப்சல் குருவுக்கு
அடுத்து காஷ்மீரியான அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரி்ததார் பிரணாப் முகர்ஜி. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர் குரு. இவரும் ரகசியமான முறையிலேயே தூக்கிலிடப்பட்டார்.

கர்நாடகத்தின் சைபன்னா
அடுத்து கர்நாடகத்தைச் சேர்ந்த சைபன்னா நிங்கப்பா நாடிகர் என்பவரின் கருணை மனு நிராகரி்க்கப்பட்டது. இவர் தனது இரு மனைவிகள் மற்றும் மகளைக் கொலை செய்தவர். இருப்பினும் இவரது சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உடனடியாக அப்பீல் செய்யப்பட்டதால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 4 பேரின் மனுக்கள் அதிரடி நிராகரிப்பு
தற்போது ஒரே நாளில் நான்கு பேரின் கருணை மனுக்களை அதிரடியாக நிராகரித்துள்ளார் குடியரசுத் தலைவர். வீரப்பன் கூட்டாளிகளான மீசை மாதையன் (இவருக்கு தற்போது 60 வயதுக்கு மேலாகிறது), ஞானப்பிரகாசம், சைமன், பிலவேந்திரன் ஆகியோரது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இன்னும் எத்தனை பேருக்குத் தூக்கோ...?
குடியரசுத் தலைவர் முன்பு இன்னும் பலரின் கருணை மனுக்கள் காத்துள்ளன. அவற்றின் மீதும் அதி விரைவாக அவர் முடிவை அறிவிப்பாரா என்பது தெரியவில்லை. அல்லது இந்த நாலோடு போதும், அப்புறம் பார்த்துக்கலாம் என்று தற்போதைக்கு கோப்புகளை ஓரம் கட்டி வைப்பாரா என்பதும் தெரியவில்லை.
லோக்சபா தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மனதில் கொண்டே மத்திய அரசு இப்படி திடீரென தூக்கில் போட ஆரம்பித்துள்ளதாக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் மக்களும் கூட முனுமுனுக்க ஆரம்பித்துள்ளன.












Click it and Unblock the Notifications