மயான வாழ்க்கை.... செத்து செத்து பிழைக்கும் செர்பியா மனிதர்
நிஸ்: மயானம் என்றாலே சிலருக்கு மரணபயம் வந்துவிடும். ஆனால் 15 வருடமாக மயானத்தில் வசித்து வருகிறார் செர்பியா நாட்டைச் சேர்ந்த நபர்.
நிஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த பிரடிஸ்லவ் ஸ்டோஜனோவிச் என்ற 43 வயதான நபரே மயானத்தில் கல்லறையொன்றினுள் வசித்து வருகின்றார்.
மயானத்தில் வாழ்வது பயமில்லா விட்டாலும் பசிதான் தன்னை செத்து செத்து பிழைக்க வைக்கிறது என்று கூறுகிறார் இந்த மனிதர்.
நம் ஊரில் ஒருநாள் இரவு மயானத்தில் தங்கவே நடுங்கிப் போவார்கள். இந்த நவீன பிதாமகன் வாழும் மயான வாழ்க்கை சுவாரஸ்யமானதாகத்தான் இருக்கிறது.
துரத்திய கடன் சுமை
கடன்சுமை ஏற்பட்டால் சொத்து சுகத்தை விற்றுவிட்டு எங்காவது கண் காணாத இடத்திற்கு போய்விடுவார்கள். ஆனால் கடன் சுமை காரணமாக தனது வீட்டை இழந்த பிரடிஸ்லவ் பின்னர் வீதியில் தங்கினார்.
மயானத்தில் தஞ்சம்
வீதியில் தங்கினாலும் கடுங்குளிர் வாட்டவே மயானத்தில் தஞ்சம் புகுந்தார். அந்த வாழ்க்கை பிடித்துப் போகவே நிரந்தரமாகவே தங்கிவிட்டார். கடந்த 15 ஆண்டுகளாக மயானத்திலேயே உண்டு உறங்கி வாழ்ந்து வருகிறார்.
குப்பைத் தொட்டியில் உணவு
மயானத்திற்கு வரும் சிலர் தனக்கு உணவு கொண்டுவந்து தருவதாகக் கூறும் பிரடிஸ்லவ், சிலவேளைகளில் குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் உணவுகளை எடுத்து உண்கிறாராம்.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
பகலில் ஓரளவிற்கு சமாளித்தாலும், இரவு நேரங்களில் அச்சத்தை விரட்ட மெழுகுவர்த்தி கொளுத்தி வெளிச்சம் ஏற்படுத்திக்கொள்கிறார்.
பயமுறுத்தும் பசி
மயானத்தின் அமைதி அவருக்கு பிடித்துப்போகவே பயமில்லாமல் வாழ்ந்து வரும் பிரடிஸ்லவ், பசிதான் தன்னை பல நேரங்களில் பயமுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.