ரத சப்தமி : திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
திருப்பதி: சூரிய ஜெயந்தி தினமான இன்று திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதி உலா வந்ததை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
சப்தமி திதி சூரியனுக்கு உகந்த திதி. இன்றைய தினம் ரதசப்தமி விழாவை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் மகாவாயில் முதல் சுவாமி சன்னதி வரை வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
நேற்று திருமலையில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று தரிசனம் முடித்தவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ரதசப்தமி விழா என்பதாலும், அதனை காண பக்தர்கள் அங்கேயே தங்கி விட்டனர். இன்று ஏராளமான பக்தர்கள் திருமலை வந்தனர். காலை வரை 2 லட்சம் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அதிகாலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளினார்.
7 வாகனங்களில் வீதி உலா
சூரிய கதிர்கள் அவரது நெற்றி முதல் பாதம் வரை பட்டதும் வீதி உலா புறப்பட்டது. இதையடுத்து சின்ன சேஷவானம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சல்ப விருட்சக வாகனங்களில் மலையப்ப சாமி வீதி உலா வந்தார். இரவு சந்திரபிரபை வாகன உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
வழக்கமாக பிரமோற்சவ காலங்களில்தான் இந்த வீதி உலா நிகழ்ச்சியை காண முடியும். ஆனால் ரத சப்தமியன்று ஒரே நாளில் அனைத்து வாகன வீதி உலாவும் நடந்ததால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.