திண்டிவனத்தில் ராமதாஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற 90 பேர் கைது
திண்டிவனம்: திண்டிவனத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற தலித் மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் அன்பில் பொய்யாமொழி 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிராக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியும், செயல்பட்டும் வருவதாக பல்வேறு தலித் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில் ராமதாஸை கண்டித்து தைலாபுரத்தில் உள்ள அவரது வீடு, திண்டிவனத்தில் உள்ள அவரது மகள் வீட்டை முற்றுகையிடப் போவதாக தலித் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் அன்பில் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அதன்படி முற்றுகை போராட்டத்திற்காக அன்பில் பொய்யாமொழி தலைமையில் தலித் மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டிவனம்-விழுப்புரம் மெயின் ரோட்டில் உள்ள தென்பஜாரில் குவிந்தனர்.
அவர்கள் ஊர்வலமாக சென்று ராமதாஸ் வீட்டை முற்றுகையிட புறப்பட்டனர். அப்போது அவர்களை டிஎஸ்பி குப்புசாமி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், முரளி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்த தலித் அமைப்பினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அன்பில் பொய்யாமொழி உள்பட 90 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.