வேலூர் சிறையில் பீடி, சிகரெட் கிடைக்காததால் கைதி தற்கொலை மிரட்டல்: பரபரப்பு
வேலூர்: வேலூர் சிறையில் கைதி ஒருவர் தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வயலூர் தாமரைக்குள தெருவைச் சேர்ந்தவர் மணி என்கிற மணிகண்டன்(28). ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அவர் மீது கொலை மிரட்டல், பொது சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் போலீசார் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இன்று காலை சிறை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறிய அவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். அவரை நைசாகப் பேசி கீழே இறங்க வைக்க சில கைதிகள் தண்ணீர் தொட்டியில் ஏறினர். இதைப் பார்த்த மணிகண்டன் அங்கிருந்து குதிக்க முயன்றார்.
இது குறித்து தகவல் அறிந்த சிறை சூப்பிரண்ட் அறிவுடைநம்பி அங்கு வந்து மணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தன்னைப் பார்க்க உறவினர்கள் யாரும் சிறைக்கு வராததாலும், பீடி, சிகரெட் கிடைக்காததாலும் வாழப் பிடிக்கவில்லை என்றார். இதையடுத்து அறிவுடைநம்பி அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்தார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.