பசியால் வாடிய 3 சகோதரிகளை உணவு வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று கற்பழித்து கொலை
மும்பை: மகாராஷ்டிராவில் பசியால் வாடிய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் உணவு வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பந்தரா மாவட்டத்தில் உள்ளது லக்னி கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழை பெண் ஒருவருக்கு 11, 9 மற்றும் 5 வயதில் மூன்று மகள்கள் இருந்தனர். அவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு தனது மகள்களைக் காணவில்லை என்று அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். மறுநாள் காலை 3 சிறுமிகளின் உடல்கள் கிரமாத்தின் எல்லையில் ரோட்டோரம் உள்ள தாபா அருகே உள்ள கிணற்றில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த தாபா அருகே மதுபாட்டில்களும், சிறுமிகளின் செருப்புகளும் கிடந்தன.
அந்த 3 உடல்களைப் பார்த்த அப்பெண் கதறி அழுதார். ஆனால் போலீசாரோ சிறுமிகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் பசியால் வாடியதால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதை எதிர்த்து ஊர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த பிறகு உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவர்கள் 3 பேரும் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து போலீசார் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமிகளுக்கு போதிய உணவு கொடுக்கும் அளவுக்கு அவர்களின் தாய் சம்பாதிக்காததால் அவர்களுக்கு உணவு வாங்கித் தருவதாக யார் வேண்டுமானாலும் அழைத்துச் செல்வது எளிது என்று ஊர் மக்கள் தெரிவித்தனர். மேலும் தாபாக்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications