பாலச்சந்திரன் கொலை எதிரொலி: சென்னை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சேனல் 4 நேற்று வெளியிட்டது. அதில் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் மணல்மூடைகள் அடுக்கி வைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து பிஸ்கட் போன்று ஏதோ சாப்பிடுகிறார். அதன் பிறகு அவரை 2 அடி தூரத்தில் இருந்து சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது மார்பில் 5 இடங்களில் குண்டு பாய்ந்த புகைப்படங்களைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கொடூரக் கொலைக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மர்மநபர்கள் கல் வீசித் தாக்கியுள்ளனர். இதில் அலுவலக கண்ணாடி சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று ஏர்லைன்ஸ் அலுவலகத்தார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பின் குறிப்பிட்ட 3 முதல் 4 பேர் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
28ம் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்: கி. வீரமணி
வரும் 28ம் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அந்நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே -மாவீரன் பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரமாக மார்பில் 5 குண்டுகளைப் பாய்ச்சிப் பச்சைப் படுகொலை செய்யப்பட்ட படங்களை உலகெங்கும் பரப்பி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திவிட்டார்.
இன்று உலகளவில் பேசப்படும் முதல் நிலைச் செய்தி இது தான். இதன் மூலம் இலங்கை சிங்கள இனவாத அரசு அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மனிதாபிமானமற்ற கொடிய ஹிட்லர் முகம் உலகெங்கும் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது.
அதுவும் ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க அரசால் இலங்கைக்கு எதிராகப் புதியதோர் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள ஒரு கால கட்டத்தில் இப்படி ஒரு செய்தி உலகெங்கும் தொலைக்காட்சி மூலம்அதிரடியாக வெளி வந்திருப்பது - இலங்கை அரசின் மீதான உலகப் பார்வை மேலும் கொழுந்து விட்டு எரியக் கூடிய நிலைதான். போர்க் குற்றவாளி தான் ராஜபக்சே என்பதற்குக் கூடுதல் சாட்சியமாகும்.
கடுமையான - அதேநேரத்தில் உண்மையான இந்தக் குற்றச்சாற்றிலிருந்து எப்படியாவது விடுவிக்கப்பட வேண்டும் என்ற மிகப் பெரிய நெருக்கடிப் பள்ளத்தாக்கில் இலங்கை அரசும், ராஜபக்சேவும் தள்ளப்பட்டுவிட்டனர்.
ஹிட்லரும், முசோலினியும், இடி அமீன்களும் என்றாவது உண்மைகளைப் பேசி இருக்கிறார்களா? இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் (பிரிகேடியர் ரூபன் வானிகசூர்யா) என்ற ஒருவர் பெயரால் சேனல் 4ஒளிபரப்பும் படங்கள் பொய்யானவை என்று மறுப்பு வெளி வந்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட பிரபாகரன் மகன் பாலசந்திரன் படம் உண்மையானது தான்; சித்திரிக்கப்பட்டவையல்ல என்று வெளியிடப்பட்ட படங்களுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளார் கெல்லம்மெக்ரே.
அது மட்டுமல்ல, தமிழ்ப் பெண்களுக்கு எதிராக சிங்கள ராணுவ வெறியர்கள் நடத்திய பாலியல் வன்கொடுமை, சரண் அடைய வந்த போராளிகளை சுட்டுக் கொன்ற காட்சிகள் எல்லாம் விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளன என்று பிரிட்டன் நிறுவனம் அறிவித்திருப்பதன் மூலம் ராஜபக்சேயின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் இயக்குநர் கெல்லம்மெக்ரே.
இந்த நிலையில் உலக மக்களின் கண்களில் மிளகாய்த் தூள் தூவி உண்மைத் தகவலை முற்றிலும் தகர்த்திட வழக்கமான பொய்ப் பிரச்சாரம் என்னும் பட்டத்தை உலகெங்கும் பறக்க விட முயற்சிக்கிறார். ராஜபக்சேயின் இந்தக் கேவலத்தைக் கண்டிக்கும் வகையிலும், கீழே தள்ளியதோடு அல்லாமல் குழியையும் பறிக்கும் இலங்கை பாசிச அரசின் முகமூடியைக் கிழிக்கும் வகையிலும், "இந்திய அரசே" "இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூடு!" எனும் முழக்கத்தை முன்னெடுப்போம்.
வரும் 28.2.2013 வியாழன் காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை திராவிடர் கழகம் மேற்கொள்ளும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications