தேனி பெண்ணுடன் மாயமான தென்காசி கல்லூரி மாணவர் மீட்பு
தென்காசி: தேனி பெண்ணுடன் மாயமான தென்காசி பாலிடெக்னிக் மாணவரை போலீசார் திருப்பூரில் மீட்டனர்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி தனலெட்சுமி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனலெட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திலேந்திரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன் தனலெட்சுமி திலேந்திரனுடன் தென்காசி பெருமாள் கோவில் தெருவில் வாடகை வீட்டில் குடியேறினார். அப்போது பக்கத்து வீ்ட்டை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சுப்பிரமணியன் குடும்பத்தினருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் தனலெட்சுமிக்கும், சுப்பிரமணியன் மகன் மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மணிகண்டன் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி கல்லூரிக்கு சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லை. மறுநாள் தனலெட்சுமியும், திலேந்திரனும் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். பல இடங்களில் தேடியும் மணிகண்டனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சுப்பிரமணியன் மனைவி லதா தென்காசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாணவரை தேடி வந்தனர்.
இதற்கிடையே லதா மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம் மாணவரை விரைவில் கண்டுபிடிக்க தென்காசி போலீசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் கருவலூர் கிராமத்தில் தனலெட்சுமியுடன் மணிகண்டன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று இருவரையும் மீட்டு சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் முரளிகண்ணன் விசாரித்தபோது தன்னை யாரும் கடத்தவில்லை. நான் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என மணிகண்டன் தெரிவித்தார். இதற்கிடையே மதுரை உயர் நீதிமன்றம் மாணவரை வரும் 22ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனால் மாணவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்க வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications