பிரபாகரன் மகன் கொலையைக் கண்டித்து மார்ச் 4ல் இலங்கை தூதரகம் முற்றுகை: வைகோ

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய ஈழத்தமிழர் படுகொலைக் காட்சிகள், சேனல்-4 காணொளி ஆதாரங்களோடு, ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
25-8-2010ல் ஈழத்தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேர் அம்மணமாக, கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் தரையில் மிதித்துத் தள்ளப்பட்டு, சிங்கள ராணுவத்தினரால் பிடறியில் சுட்டுக்கொல்லப்பட்ட கோரக் கொலைகளை சேனல்-4 வெளியிட்டது, நம் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது.
2010ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி அன்று சேனல்-4 வெளியிட்ட மற்றொரு காட்சி நம் இரத்தத்தை உறைய வைத்தது. ஈழத்தங்கை இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தினரால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு சிதைந்து தரையில் கிடக்கும் காட்சி, நம் மனங்களை நடுங்கச் செய்தது.
இப்போது நம் போற்றுதலுக்குரிய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளைய புதல்வன், 12 வயதான பாலகன் பாலச்சந்திரன் கண் முன்னால் ஐந்து ஈழத்தமிழர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு, பின்பு, அச்சின்னஞ்சிறு பாலகனையும் சுட்டுக் கொலை செய்த கொடுமை, கோடானுகோடி தமிழர்களை மனம் பதறச் செய்து, உலகில் தமிழனுக்கு நாதி இல்லையா? என்ற கேள்வியை எழுப்பிவிட்டது.
இன்னும் நம் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சும் தமிழர் படுகொலைக் காட்சிகளை, சேனல்-4 வெளியிட இருக்கிறது.
மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பவும், நீதி கேட்கவும், சிங்கள கொலைகார ராஜபக்சே அரசை கூண்டில் நிறுத்தித் தண்டிக்கக் கோரியும், சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்தக் கோரியும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்திற்கு விடியலைப் பெறவும், ஜெனீவாவில் ஐ.நா. மன்றத்திற்கு முன் இலட்சக் கணக்கான புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மார்ச் 4ம் தேதி மாபெரும் மக்கள் கூடல் நிகழ்ச்சியில் அறப்போர் கொடி உயர்த்தி முழங்க இருக்கிறார்கள்.
எனவே, வரும் மார்ச் 4ம் தேதி அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கட்சி அடையாளங்கள், கட்சிக் கொடிகள் இன்றி, கருப்புக்கொடிகள் ஏந்தி சிங்களக் கொலைகார அரசை அனைத்து உலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கக் கோரியும், சிங்கள இனவாத அரசைக் கண்டித்தும் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அதே நாளில் தலைநகர் சென்னையில், சிங்களக் கொலைகார அரசை எதிர்த்து இலங்கை தூதரகத்தைக் கருப்புக்கொடி ஏந்தி முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
இந்த அறப்போராட்டத்தை வீறுகொண்ட உணர்ச்சிப் போராட்டமாக நடத்திடவும், தமிழ்ப் பெருமக்கள் பல்லாயிரக்கணக்கிலே இதில் பங்கு ஏற்கவும் வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications