வைகோ- ஜெயலலிதா சந்திப்பு: அதிமுக- மதிமுக கூட்டணிக்கு முன்னோட்டம்?!
சென்னை: நடைப்பயணம் மேற்கொண்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, சாலையில் காரை நிறுத்தி நின்று பேசி விட்டுச் சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் செயல், அதிமுக, மதிமுகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதிலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு கட்சியும் மீண்டும் கூட்டணி சேருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆனால் இந்த சந்திப்பை அப்படி சிந்திக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் வைகோ.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ காஞ்சீபுரம் மாவட்டம் கோவளத்தில் இருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பகல் 3 மணியளவில் பையனூர் அருகே முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை தாண்டி 2 கிலோ மீட்டர் தூரத்தில் வைகோ கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது கோட்டையிலிருந்து சிறுதாவூருக்கு முதல்வர் ஜெயலலிதா காரில் சென்று கொண்டிருந்தார். பையனூர் அருகே தொண்டர்களுடன் வைகோ நடந்து வருவதை பார்த்த முதல்வர் ஜெயலலிதா, காரை நிறுத்தும்படி தனது கார் டிரைவருக்கு உத்தரவிட்டார்.
முதல்வரின் கார் நிற்பதைப் பார்த்த வைகோ, உடனடியாக காரை நோக்கி வேகமாக சென்றார். ஜெயலலிதாவும் காரை விட்டு இறங்கினார். வைகோவைப் பார்த்து புன்னகை தவழ வணக்கம் வைத்தார் ஜெயலலிதா. பதிலுக்கு வைகோவும் வணக்கம் சொன்னார். அதன் பிறகு இரு தலைவர்களும் பேசிக் கொண்டனர்.

நன்றாக இருக்கிறீர்களா வைகோ...?
ஜெயலலிதா: வைகோ நல்லா இருக்கிறீர்களா?
வைகோ: ஆமாம்மா, நான் நல்லா இருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க?
ஜெயலலிதா: எங்க ஊருக்கு (சிறுதாவூர்) இல்ல வந்து இருக்கீங்க?
வைகோ: ஆமாம் அம்மா.
ஜெயலலிதா: சாப்பிடீங்களா?
வைகோ: இல்லை. இனிமேல் தான் சாப்பிட வேண்டும்.
ஜெயலலிதா: சரி சாப்பிட எங்க வீட்டுக்கு வாங்க
வைகோ: இல்லைமா. பையனூர்ல கட்சிக்காரர் ஒருத்தர் வீட்டில் எல்லோருக்கும் சாப்பாடு தயார் ஆகி இருக்கு.

உங்களது கோரிக்கை என்ன?
ஜெயலலிதா: ரொம்ப தூரம் நடந்து வந்திருக்கிறீர்கள். உங்களது கோரிக்கை என்ன?
வைகோ: பூரண மதுவிலக்கு தான் எங்கள் கோரிக்கை.

உங்க அம்மா, ஒய்ப், குழந்தைகளைக் கேட்டதா சொல்லுங்கள்
ஜெயலலிதா: உங்களது அம்மா, ஒய்ப், பிள்ளைகளை கேட்டதாகக் சொல்லுங்கள். அவர்களை நலம் விசாரித்ததாக சொல்லுங்க.
வைகோ: நன்றி. அம்மா உங்களுக்கு முன்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். பல்லாண்டுகள் நலமோடு வெற்றிகரமாக வாழ வாழ்த்துகிறேன். 100 ஆண்டுகள் கடந்து வாழ வாழ்த்துகிறேன்.

நின்று நலம் விசாரித்ததற்கு நன்றி
ஜெயலலிதா: ரொம்ப நன்றி. போய்ட்டு வருகிறேன்.
வைகோ: நாங்கள் நடந்து வருவதை பார்த்து காரை நிறுத்தி நலம் விசாரித்ததற்கு மீண்டும் நன்றி. இவ்வாறு இருவரும் உரையாடினார்கள்.

புதிய அரசியல் நாகரீகம்
இந்த சந்திப்பு குறித்து பின்னர் வைகோ கூறுகையில், அரசியலில் வேறுபட்டிருந்தாலும், கூட்டணியில் இல்லா விட்டாலும் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது நலம் விசாரிக்கிற உன்னதமான அரசியல் நாகரீகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்றைக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார். அது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார்.

கூட்டணி அமையுமா?
இந்தக் கேள்விக்கு வைகோ எதிர்மறையாக பதிலளித்தார். அதாவது, கூட்டணியில் இல்லாவிட்டாலும் ஒருவரை ஒருவர் மதித்து நலம் விசாரிக்கும் உயர்ந்த பண்பாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று வழிகாட்டியிருக்கிறார். இந்த சந்திப்பை அரசியல் ரீதியாக சிந்திப்பதே இந்த நாகரீகத்தை கொச்சைப்படுத்திவிடும் என்றார் வைகோ.

வைகோ கோரிக்கைக்குப் பதிலளிக்காத ஜெ.
அதேசமயம், எனது கோரிக்கை பூரண மது விலக்கு என்று வைகோ கூறியபோது அதுகுறித்து ஜெயலலிதா எந்த பதிலையும் தரவில்லை. மாறாக வேறு டாப்பிக்குக்கு அவர் போய் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகோ, ஜெயலலிதா சந்திப்பு நேற்று தமிழகத்தில் பெரும் ஆச்சரியமாக பேசப்பட்டது, பார்க்கப்பட்டது. இந்த ஆச்சரியமும், வியப்பும் கூட்டணிக்கு வித்தாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...












Click it and Unblock the Notifications