புனே பாணியில் ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
புனே குண்டு வெடிப்பு
நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக சுஷில்குமார் ஷிண்டே பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனே நகரில் இதேபோல் மக்கள் கூடும் இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. புனே குண்டுவெடிப்பும் சுமார் 7.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை நடைபெற்றது. இதில் 9 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன்கள் அமைப்பு தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்ட அதே நேரத்தில் இந்துத்துவா சக்திகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடைய தயானந்த பாட்டீல் என்பவரது சைக்கிள் கடையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட சைக்கிளில்தான் குண்டுகள் வெடித்ததாகக் கூறப்பட்டது.
பின்னர் இந்திய முஜாஹிதீன்கள் அமைப்பினர்தான் காரணம் என்று கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தங்களை சிறப்பு அதிரடிப்படையினர் சித்திரவதை செய்வதாகவும் புனே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் கூறியிருந்தனர்.
புனே பாணியில் குண்டு வெடிப்பு
இதனிடையே புனே குண்டுவெடிப்பு வழக்கில் இன்று மாலைதான் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே புனே பாணியிலான குண்டுவெடிப்பு சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. புனேயில் நிகழ்த்தியதைப் போலவே மக்கள் கூடுமிடங்களில் இரவு 7 மணி முதல் 7.15 வரையில் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டிருக்கின்றன. மோட்டார் சைக்கிளில் இருந்து வெடிக்காத குண்ட் ஒன்றும் கண்டு எடுக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.