ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான ரிபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 10க்கும் அதிகமானோர் உயிரிழந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். இப்பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற இக்கட்டான சூழலில் அனைத்து தரப்பு மக்களும் அமைதிக் காத்து, சட்டம் ஒழுங்கைக் காத்திட ஆந்திர அரசுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆந்திர மாநில காவல் துறையும், உளவுத் துறையும் மதச்சாயம் பூசி யாரையாவது கைது செய்து வழக்கை முடிக்க முயலாமல், நிதானமாக ஆராய்ந்து, உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.