நெல்லையில் இரவில் நிர்வாணமாக திரிந்தவர்: ஆடை அணிவிக்க போலீசார் திண்டாட்டம்
நெல்லை: நெல்லையில் நிர்வாணமாக திரிந்த மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு ஆடை அணிவிக்க ஆட்டோ டிரைவர்களும், போலீசாரும் படாதபாடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை கொக்கிரகுளம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த சில நாட்களாக 45 வயது மதிக்கத்தக்கவர் மந்ததாச புன்னகையுடன் நடமாடிக் கொண்டிருந்தார். நேற்று மாலை அந்த பஸ் நிறுத்தத்தில் முற்றிலும் நிர்வாணமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அதை பார்த்து அந்த பக்கமாக சென்றவர்கள் முகம் சுளித்தனர். உடனடியாக அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் சால்வையை வேட்டியாக கருதி அவருக்கு அணிவிக்க முயன்றனர். அவரோ அதை ஏற்க மறுத்தார். போக்குவரத்து போலீசாரும் உடன் நின்று வேஷ்டி உடுத்தும் வேலையை கண்காணித்தனர்.
ஆனால் அவர் வேஷ்டியை அவிழ்த்துவிட்டு மீண்டும் பஸ் நிறுத்தத்தில் கால் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்தார். இந்த வேஷ்டி அணிவிக்கும் போராட்டம் சுமார் 1 மணி நேரம் தொடர்ந்தது. இதையடுத்து அவர் பஸ் நிறுத்தத்தை விட்டு வெளியேறினார். இரவு வண்ணார்பேட்டை, நெடுஞ்சாலை, திருவனந்தபுரம் சாலைகளில் நிர்வாணமாக மனம் போன போக்கில் நடந்தார். நகரில் நடமாடிய பெண்கள் அவரைப் பார்த்து அச்சத்துடன் விலகி ஓடினர்.