ரூ.500கோடி... ஓட்டு வங்கியை குறிவைத்து மடங்களுக்கு கொட்டி கொடுத்த பாஜக
பெங்களூரு: கர்நாடகாவில் இந்துக்களின் ஓட்டுக்களை கவருவதற்காகவும், ஜாதி ஓட்டுக்களை குறிவைத்தும் ஆளும் பாஜக முதல்வர்கள் அங்குள்ள மடங்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்துள்ள சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் வரிப்பணத்தை மடாதிபதிகளுக்கும் சாமியார்களுக்கு வாரி இறைத்த பாஜக முதல்வருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை கிளப்பியுள்ளனர் எதிர்கட்சியினர். இந்த விமர்சனம்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் வாக்குகளை கவர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு செலவழிப்பதை விடுத்து ரூ.500 கோடி வரை வாரி இறைத்துள்ளனர் கர்நாடகாவை ஆளும் கட்சியான பாஜக முதல்வர்கள்.

மடாதிபதிகளுக்கு சலுகைகள்
இந்தியாவில் உள்ள மடங்களுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. கர்நாடக மாநிலத்தில் பல நூறு ஆண்டு பழமையான மடங்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள முக்கியமான மடங்கள் பலநூறு ஆண்டுகள் பழமையானவை.

அரசியல்வாதிகள் ஆதரவு
பீதர் மாவட்டத்தில் சன்னபஷவா சிவாச்சார்ய சுவாமிஜி தலைவராக இருக்கும் ஹர்குட் மடம் 600 ஆண்டுகள் பழமையானது. இந்த மடத்திற்கு ஆளும் பாஜகவினரின் ஆதரவு பெரிதும் உள்ளது. கர்நாடக மக்களின் வாக்கு வங்கியை குறிவைத்து அதிக சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இந்த மடங்கள் மக்களுக்கு தேவையான கல்வி, மருத்துவ சேவைகளை அளித்து வருகின்றன. இதற்காக ஆளும் பாஜக அரசு பணம் ஒதுக்குகிறது என்பது உண்மை.

கோவிலை சீரமைக்க நிதி
இது தவிர ஜெயம்ருத்ஞ்சய சுவாமிஜி குடலசங்கமா பஞ்சமசலி மடத்திற்கு கோவிலை சீரமைக்கவும், சமூக சேவை செயல்களுக்காகவும் பல கோடி ரூபாய் அரசு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் 500 கோடி ரூபாய்
கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எடியூரப்பா ஆட்சி காலத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எடியூரப்பாவின் 34 மாத ஆட்சி காலத்தில் இந்த பணம் பல்வேறு மடங்களுக்கு வாரி இறைக்கப்பட்டுள்ளது.

சதானந்த கவுடாவின் பட்ஜெட்
எடியூரப்பாவின் ஆட்சிக்குப் பின்னர் கர்நாடகாவில் சில மாதங்கள் ஆட்சி செய்த சதானந்த கவுடா 2012-13 பட்ஜெட்டில் 75 கோடி ரூபாய் பல்வேறு சமூக மடங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெகதீஷ் ஷெட்டர் ரூ.200 கோடி
தற்போது கர்நாடகாவை ஆளும் ஜெகதீஷ் ஷெட்டர் மடங்களுக்கு 200 கோடி ரூபாய் வரை வாரி இறைத்துள்ளார். இதில் லிங்காயத்து சமூக மடங்களும் அடக்கம்.

அரசியலில் மடங்களின் பங்கு
கர்நாடக அரசியலில் அங்குள்ள மடங்களும், மாடாதிபதிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால்தான் மடங்களின் செயல்பாடுகளுக்கு கோடி கோடியாய் கொட்டி கொடுக்கின்றனர் பாஜக முதல்வர்கள். மக்களின் வரிப்பணத்தை மடங்களுக்கு வாரி இறைப்பது வாக்கு வங்கியை குறிவைத்துதான் என்று குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள்.












Click it and Unblock the Notifications