ப.சிதம்பரத்தின் பட்ஜெட்... என்ன கிடைக்கும் மக்களுக்கு?

பட்ஜெட் தாக்கல் செய்யப் போகும் ப.சிதம்பரம் என்ன செய்வார்? செய்யமாட்டார்? என்பதை பார்ப்போம்
மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை எதிர்வரும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் சிதம்பரம் அறிவிக்கக் கூடும். பட்ஜெட் தொடரில் உணவு பாதுகாப்பு மசோதாவை அறிமுகப்படுத்தக் கூடும். இதேபோல் உங்கள் பணம் உங்கள் கையில் என்ற பயனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகலாம். நடுத்தர மக்களை மகிழ்விக்கும் வகையில் வருமான வரி செலுத்துவதற்கான வரம்பு அதிகரிக்கப்படலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2012-13ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5% ஆக இருந்தது. 2011-ம் ஆண்டிலிருந்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18% இழக்கப்பட்டிருக்கிறது. செலவினங்களை கட்டுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது என்பதும் ப.சிதம்பரம் முன் உள்ள முதன்மையான சவாலாக இருக்கும். அப்போதுதான் நடுத்தர மக்களின் மனங்களை வென்று வாக்குகளாக அவற்றை அறுவடை செய்ய இயலும்.
லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் நிச்சயமாக வரி உயர்வு இடம்பெறப் போவது இல்லை. வரி உயர்வு இடம்பெறாமல் போனால் நிச்சயமாக அது பொருளாதார நெருக்கடியைத்தான் உருவாக்கும். இதை சமாளிக்க வேண்டிய சவாலும் ப.சிதம்பரத்துக்கு இருக்கிறது. பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதங்களில் மாற்றங்களை செய்ய வாய்ப்புகள் இருக்கிறது.
இந்தியாவில் அன்னிய முதலீடு என்பது குறைவாகத்தான் இருக்கிறது. இதை எதிர்கொள்ளும் வகையில் வரி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து செயல்பட வேண்டிய பொறுப்பும் ப. சிதம்பரத்துக்கு உண்டு. இப்படிச் செய்வதின் மூலமே அன்னிய முதலீட்டை அதிகளவில் இந்தியாவுக்குள் கொண்டுவரவும் முடியும்.












Click it and Unblock the Notifications