காவிரி நதிநீர் வழக்கு: ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை
காவிரி நீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் காவிரி நீர் தொடர்பான அவதூறு வழக்குகள் உள்ளிட்டவை முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் இதற்காக உத்தரவு எதுவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
மேலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்க்கும் கர்நாடகத்தின் மனு மீதான விசாரணை, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் உள்ள சந்தேகங்களை தீர்ப்பது தொடர்பான தமிழக மற்றும் கேரள அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகியவை ஆகஸ்ட் 6-ந் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி விசாரணை 2 வார காலத்துக்கு நடைபெறக் கூடும். அதன் பின்னர் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொடர்பாக உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக் கூடும்.