டெல்லியில் வெடிகுண்டுகள் சிக்கியதாக பெரும் பீதி -புரளி என அறிவிப்பு
டெல்லி: டெல்லியில் இன்று மாலையில் இரண்டு மர்மமான பேக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது. அதில் வெடிகுண்டுகள் இருந்ததாக தகவல் பரவியதால் மேலும் பீதி ஏற்பட்டது. ஆனால் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் கண்டுபிடிக்கப்பட்ட பேக்குகளில் ஒன்றை ராணுவ வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் அழித்து விட்டனர். இதனால் அதில் வெடிகுண்டு இருந்திருக்கலாமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இரண்டில் ஒரு பேக், நாராய்ணா என்ற பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ராணுவத்தின் சிறப்பு வெடிகுண்டு அகற்றும் படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் பேக்கைக் கைப்பற்றி சோதனையிட்டபோது அதில் வயர்கள் இருந்தது தெரிய வந்தது.
பின்னர் இந்த பேக்கை தனியான ஒரு இடத்திற்குக் கொண்டு போய் அதை அழித்து விட்டனர். இருப்பினும் அதில் வெடிகுண்டு இருந்ததா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
அதேபோல கிரேட்டர் கைலாஷ்-1 பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது ஒரு பேக் அனாதரவாக விடப்பட்டிருந்தது. போலீஸார் உடனடியாக விரைந்து வந்தனர். இது யாருடைய பை என்று ஒலிபெருக்கி மூலம் முதலில் கேட்டனர். அப்போது ஒருநபர் வந்து அது தனது பை என்று கூறியதால் பதட்டம் அடியோடு தணிந்தது.
மொத்தத்தில் இன்றைய மாலையை டெல்லி மக்கள் பெரும் பீதி மற்றும் பதட்டத்துடன் முடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.