டெல்லியில் பயங்கரம் - பஸ் ஸ்டாண்ட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் பெண்
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக தற்போது பஸ் நிலையத்தில் வைத்து இளம் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டெல்லி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த சம்பவம்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் பூஜா. வயது 25 ஆகிறது. கிழக்கு டெல்லியில் உள்ள பஜன்புரா என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் நேற்று இரவு 8 மணியளவில் சராய் காலே கான் பஸ் நிலையத்தில் வைத்து ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை சுட்ட நபரின் பெயர் முன்ஷி யாதவ். நெற்றியில் வைத்து சுட்டுள்ளார் யாதவ். சுடுவதற்கு முன்பு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
முன்ஷி குடிபோதையில் இருந்ததாகவும், அவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்ததவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்ட பெண்ணும், துப்பாக்கியால் சுட்ட நபரும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்களாம். தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதாக தெரிகிறது.