ஜெ.வுடன் சாலையில் பேசியதை வைத்து கூட்டணி என்று சொல்லக் கூடாது - வைகோ
காஞ்சிபுரம்: முதல்வர் ஜெயலலிதா, எனது நடை பயணத்தின்போது காரை நிறுத்தி என்னை சந்தித்துப் பேசியது உயரியஅரசியல் நாகரீகமாகும். இதை வைத்து கூட்டணி என்று பேச்சு எழுந்துள்ளது. இது அந்த அரசியல் நாகரீக சந்திப்பை கொச்சைப்படுத்துவதாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். காஞ்சிபுரத்துக்கு சனிக்கிழமை இரவு அவர் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு தொண்டர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது இலக்கு பூரண மதுவிலக்கு. அதை அடையும் வரை தொடர்ந்து போராடுவோம், வெற்றி காண்போம். பையனூர் அருகே நடைப்பயணத்தின்போது அவ்வழியே காரில் சென்ற முதல்வர் ஜெயலலிதா என்னை சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் சில மீடியாக்கள் இதை பெரிதுபடுத்தி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - மதிமுக கூட்டணி எனக் கூறுகின்றனர்.
முதல்வர் என்னை சந்தித்தது திட்டமிட்டது அல்ல. அரசியல் நாகரிகத்தில் என்னிடம் நலம் விசாரித்தார். இது எனக்கு மிகவும் சந்தோஷம். இதை கொச்சைப்படுத்த வேண்டாம். இதில் வேறு எதுவும் இல்லை என்றார் வைகோ.













Click it and Unblock the Notifications