2வது பதவிக்காலம் முடிந்ததும் ஓய்வு... கியூப அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ அறிவிப்பு
கியூபா: கியூபாவின் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவுல் கேஸ்ட்ரோ, தனது ஐந்தாண்டு கால ஆட்சி முடிந்தவுடன் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.
கியூப புரட்சிக்குப் பின்னர் 1959-ம் ஆண்டு முதல் கியூபாவை கேஸ்ட்ரோ சகோதரர்கள் ஆண்டு வருகின்றனர். உடல்நலக் குறைவால் கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்ற பின்னர் அவரது சகோதரரான ரவுல் காஸ்ட்ரோ அதிபராகப் பொறுப்பேற்றார்.
இரண்டாவது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்பட்டபின் முதல்முறையாக கூடிய நாடாளுமன்ற கூட்டத்திற்குப்பிறகு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் முக்கிய முடிவு ஒன்றினை அறிவித்துள்ளார். அதாவது தனது ஐந்தாண்டு கால ஆட்சி முடிந்தவுடன் ஓய்வுபெறப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
கியூபாவின் புதிய துணை அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டியாஸ் கேனல் தம்மோடு இணைந்து மக்களுக்காக சிறந்த முறையில் பணியாற்றுவார் என்றும் ரவுல் அறிவித்தார்.
அண்மையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற கியூபாவுக்கு வந்த வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் சிகிச்சை பெற, ரவுல் கேஸ்ட்ரோ எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.