டெல்லி வந்த ரயிலில் சீட்டுக்கு அடியில் பிளாஸ்டிக் பையில் பெண் பிணம்: போலீசார் விசாரணை
டெல்லி: ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு வந்த ரயிலில் பிளாஸ்டிக் பையில் பெண் ஒருவரின் பிணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஹரியானா மாநிலம் பானிபட்டில் இருந்து கிளம்பிய பயணிகள் ரயில் நேற்று முன்தினம் இரவு டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்தது. பிளாட்பாரம் எண் 9ல் வந்து நின்ற அந்த ரயிலில் மரத்தாலான இருக்கைக்கு அடியில் ஒரு பெரிய வெள்ளை நிற பிளாஸ்டிக் பை இருந்தது. இதை பார்த்த ரயில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வந்து பையைத் திறந்தபோது அதற்குள் நீல நிற பிளாஸ்டிக் பை இருந்தது. அந்த பையில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் இருந்தது. அந்த பெண் பிரவுன் கலர் சல்வார் அணிந்திருந்தார். அவரது கை, கால்கள், கழுத்து பச்சை நிற பிளாஸ்டிக் கயிறால் கட்டப்பட்டிருந்தது. அந்த பெண்ணின் உடல் நாயக் மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் புகைப்படத்தை நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளை தொடர்பு கொண்டு விசாரிக்கவும் முயன்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications