ராமர் பாலத்தை தகர்க்கும் முடிவு- பாஜக எதிர்ப்பால் ராஜ்யசபாவில் கடும் அமளி
டெல்லி: ராமர் பாலத்தை தகர்த்து சேதுக்கால்வாயை உருவாக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது.
சேதுக்கால்வாய் திட்டம்
பாக். ஜலசந்தி பகுதியில் ராமர் பாலம் எனப்படும் பகுதிகளை ஆழப்படுத்தி அதை கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றுவதுதான் சேதுக்கால்வாய் திட்டம். இது நிறைவேற்றப்பட்டால் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையை சுற்றாமல் சேதுக்கால்வாய் வழியாக வங்கக்கடலை நேராக அடைய முடியும்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பச்சோரி தலைமையில் ஒரு குழுவை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மாற்றுவழியில் சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றுவது என்பது பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியில் சாத்தியமில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்த தமது நிலையை மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்தது. அதில் ராமர் பாலத்தை தகர்க்கும் திட்டம் குறித்து மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று ராஜ்யசபாவில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. அப்போது பேசிய பாஜகவின் பிரகாஷ் ஜவதேகர், ராமர் பாலத்தை அகற்றுவது தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. நாங்கள் அதை நடக்க விடமாட்டோம். மக்களின் மத உணர்வுகள் பற்றியோ, பாரம்பரியச் சின்னம் என்ற வகையிலோ அரசு கவலைப்படவில்லை. ராமர் பாலத்தை அகற்றாமல், மாற்றாக கூறியுள்ள பச்சோரி கமிட்டியின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது அமைச்சர் ராஜீவ் சுக்லா, வாக்குகளுக்காக பாஜக அரசியல் விளையாட்டு விளையாடுகிறது என்றார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. எம்.பி.க்களும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இந்த அமளியால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications