இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்: மனித உரிமைகள் அமைப்பு

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு நேற்று 140 பக்க அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2006-2012 ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களை இலங்கை ராணுவத்தினர் கொடுமைபடுத்தியது குறித்து ஆய்வு செய்தோம். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகள் பற்றிய விவரங்களை அறிய சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினரும், போலீசாரும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர்.
தமிழ் பெண்கள் 75 பேரிடம் இலங்கை ராணுவம் பாலியல் துஷ்பிரோயகம் செய்தது குறித்த மருத்துவ அறிக்கை சான்றுகளுடன் பட்டியிலிட்டு இருக்கிறோம். விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கைதுசெய்யப்பட்டு கொடுமைபடுத்தப்பட்ட 31 ஆண்கள், 41 பெண்கள், 18 வயதிற்கு உட்பட்ட 3 சிறுவர்கள் பற்றிய விவரங்களையும் பட்டியலிட்டு இருக்கிறோம்.
2009-ம் ஆண்டு சரண் அடைந்த ஒரு விடுதலைப்புலியின் ஆண் உறுப்பில் இரும்பு தகடுகளும், இரும்பு பால்ரஸ் குண்டுகளும் சொருகப்பட்டுள்ளன. பின்னர் அவர் அங்கிருந்து தப்பித்து வந்து, வெளி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றியுள்ளார். 17 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு அடித்து தலைகீழாக தொங்கவிடப்பட்டுள்ளார்.
இந்த மனித உரிமை மீறல்களுக்கான மருத்துவ அறிக்கை சான்றுகள் உள்ளன. மேலும் அங்கு தற்பொழுது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளவர்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. இன்னும் நிறைய உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்திலும் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications